Published : 14 Feb 2017 11:40 AM
Last Updated : 14 Feb 2017 11:40 AM

வேலை வேண்டுமா?- பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி ஆகலாம்!

பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி பணியில் 2,736 காலியிடங் களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப் பட்டிருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும். தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும்கூட விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பைப் பொறுத்தவரையில் 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எனினும், மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரான ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

விதிகளும் முறைகளும்

எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு தேர்வுகளை உள்ளடக்கியது இரு தேர்வுகளுமே ஆன்லைன் வழியில் நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். மெயின் தேர்வில் அப்ஜக்டிவ் வடிவிலான கேள்விகளும், கூடுதலாக விரிவாக விடையளிக்கும் வகையிலான வினாக்களும் இருக்கும். இதில் தர்க்கம், கணினி அறிவியல், டேட்டா அனாலிசிஸ், பொருளாதாரம், வங்கி நிர்வாகம், ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளிலிருந்து 200 கேள்விகளும், ஆங்கிலத்தில் விரிவாக பதிலளிக்கும் வினாக்களும் இடம்பெறும்.

தேர்வு நாட்கள்

முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 29, 30, மே 6, 7 ஆகிய தேதிகளில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும். இதன் முடிவுகள் மே 17-ல் வெளியிடப்படும். அடுத்த கட்டத் தேர்வான மெயின் தேர்வு ஜூன் 4-ம் தேதி நடைபெறும். இந்தத் தேர்வின் முடிவுகள் ஜூன் 19-ல் வெளியாகும். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு இரண்டுக்குமான ஹால் டிக்கெட்டை விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்-ஐ ஏப்ரல் 15 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். குழு விவாதம், நேர்முகத் தேர்வு ஜூலை 10 முதல் தொடர்ந்து நடைபெறும்.

இலவசப் பயிற்சி

அதிகாரிப் பணிக்கு விண்ணப்பிக்கவிரும்பும் பட்டதாரிகள் மார்ச் 6-ம் தேதிக்குள் பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தின் ( >www.sbi.co.in/careers) மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், சிறுபான்மை யினருக்கு தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படும். இது குறித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே குறிப்பிட வேண்டும். பாரத ஸ்டேட் வங்கியில் நேரடி அதிகாரியாகப் பணியில் சேருவோருக்கு ஆரம்ப நிலையில் மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. அடுத்தடுத்துப் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அதிகம். இளம் வயதிலேயே பணியில் சேருவோர் பின்னாளில் உயர் பதவிக்குச் செல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x