Published : 22 Dec 2013 12:00 AM
Last Updated : 22 Dec 2013 12:00 AM

சூப்பர் நடிகனாக இருக்கவே விரும்புகிறேன்- ஜீவா சிறப்புப் பேட்டி

அரேபியர்களின் காதல் தேசமான ‘மொராக்கோ’ நாட்டில், ‘யான்’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக தயாராகிக்கொண்டிருக்கிறார், ஜீவா. புரமோஷன், படப்பிடிப்பு, கதை கேட்பது என்ற பரபரப்பான பணிகளுக்கு நடுவிலும் ஒரு நல்ல அப்பாவாக தன் மூன்று வயது மகன் ஸ்பார்ஷாவுடன் சேர்ந்து வீட்டில் ‘சடுகுடு’ ஆடிக்கொண்டிருந்தார். ‘தி இந்து’வுக்காக சிறிது நேரம் ஒதுக்குமாறு கேட்டதும் சடுகுடு ஆட்டத்தை நிறுத்தி மகனை மடியில் வைத்துக்கொண்டே பேட்டிக்கு தயாரானார்.

‘என்றென்றும் புன்னகை’ ரிலீஸ், ‘யான்’ படப்பிடிப்பு, சமுத்திரக்கனியோடு புதுப்பட ஒப்பந்தம் என்று உங்கள் திரையுலக வாழ்க்கை றெக்கை கட்டிக்கொண்டு பறக்கிறதே?

2013, என் கேரியரில் மறக்க முடியாத ஆண்டு. ‘என்றென்றும் புன்னகை’ முன்பே வரவேண்டிய படம். ‘மல்டி ஸ்டார்’ படம் என்பதால் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. ‘யான்’ படப்பிடிப்பு இன்னும் 26 நாட்கள் மீதம் இருக்கு. மொராக்கோ நாட்டில் 15 நாட்கள் ஷூட்டிங் பாக்கி. படத்தின் இரண்டாவது பாதியின் முக்கியமான காட்சிகளை அங்குதான் படமாக்குகிறோம். அங்கே படப்பிடிப்பு முடிந்ததும் மற்ற வேலைகளும் வேகமாக முடிந்துவிடும். ‘நிமிர்ந்து நில்’ படம் முடித்ததும் நானும், இயக்குநர் சமுத்திரக்கனியும் சந்தித்தோம். அருமையான ஒரு கதையைச் சொன்னார். உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டேன்.பிப்ரவரியில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

நடிப்பு மீட்டருக்குள் கச்சிதமாக பொருந்தும் நடிகர் என்று ஷங்கர் உங்களைப் பாராட்டினாரே?

நானும் 3, 4 படங்கள் தொடர்ச்சியாக தோல்வியைக் கொடுத்த நடிகன்தான். இருந்தாலும் ஜீவா படங்களுக்கு இப்போதும் ரசிகர்கள் மத்தியில் விருப்பம் இருக்கு. என் கதாபாத்திரங்களை நான் சரியாக தேர்ந்தெடுத்து நடிப்பதே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். நானும் ஒரு ஆக்டிங் மீட்டர் வைத்திருக்கேன். ஒரு கதாபாத்திரத்தின் ஓட்டத்தை புரிந்து கொண்டு, காட்சி எத்தனை நிமிடத்துக்குள் இருந்தால் ஷார்ப்பா இருக்கும் என்ற திட்டத்தோடு நடிப்பை வெளிப்படுத்துவேன். ஷங்கர் இதைத்தான் சொல்கிறார். ‘ஜீவா, கண்டிப்பாக இதை சரியாகச் செய்வார்’ என்று ரசிகன் எதிர்பார்த்தபடி செய்வது ஒரு நல்ல நடிகனுக்கு அழகு. ‘ஜீவா, எதிர்பார்க்காததை செய்திருக்கிறாரே’என்று பெயரெடுக்கும்படி நடிப்பது ஒரு சூப்பர் நடிகன் செய்வது. நான் இங்கே சூப்பர் நடிகனாக இருக்கவே விரும்புகிறேன்.

‘ஆசை ஆசையாய்’, ‘தித்திக்குதே’ ஆகிய படங்களை எல்லாம் திரும்பி பார்ப்பீங்களா?

நான் நடித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம். எல்லாமே ஏதோ ஒரு வகையில் நல்ல படங்கள் என்றுதான் எனக்குத் தோன்றும். அதுவும் ஒரு நல்ல அனுபவம். இப்போதுகூட ‘எஸ்.எம்.எஸ்’ மாதிரி ஒரு படம் கொடுங்க நண்பா, என்கிறார்கள். மாட்டவே மாட்டேன். அப்படி ஒரு கதை என்று ஒன் லைனில் யார் வந்தாலும் கதையே கேட்பதில்லை. என்னை பொறுத்தவரை ஒரு ‘டிரண்ட் செட்டர்’ நடிகன் என்ற பெயருடனேயே பயணிக்க வேண்டும்.

அப்படி டிரண்ட் செட்டிங் படங்களை கொடுத்தவன் நான் என்பதும் எனக்கு பெருமையாகத்தான் இருக்கிறது. இல்லையென்றால் ‘ஈ’. ‘ராம்’, ‘கற்றது தமிழ்’, ‘ டிஷ்யூம்’ மாதிரியான வெவ்வேறு விதமான படங்களை என்னிடம் இருந்து பார்த்திருக்க முடியாதே. கடந்த 10 ஆண்டுகளில் நான் வித்தியாசமான படங்களைத்தான் கொடுத்திருக்கிறேன். ஒரே மாதிரியான ஜீவாவை நீங்கள் படங்களில் தேடினால் கிடைக்கமாட்டான்.

‘ஜில்லா’ படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறீர்களாமே?

சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சா, நடித்த 5 நிமிஷத்துல பசங்க என்கிட்டயே போன் பண்ணி, ‘ஜில்லா டான்ஸ் சூப்பர்ப்’னு சொல்றாங்க. டெக்னாலஜி அவ்ளோ வளர்ந்தாச்சு. மோகன்லால், விஜய் இணைந்து ஆட்டம் போடும் ஒரு பாட்டில் கொஞ்ச நேரம் வந்து போகிறேன்.

உங்களோட காக்டய்ல் நண்பர்கள் ஆர்யா, விஷால் எல்லோரும் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம சுத்திக்கிட்டிருக்காங்களே?

அது அவங்க பிரச்சினை. நான் என்னைக்குமே அவங்ககிட்ட கல்யாணம் பத்தி ஆலோசனை கொடுக்கவே மாட்டேன். ஒரு தடவை இதுபத்தி ஆர்யாகிட்ட கேட்டப்ப, ‘‘ஏன், நீ படுற கஷ்டத்தை நாங்களும் படணும்னு ஆசையா!’’ன்னு கிண்டல் பண்ணினான். அவர்களுக்கான நேரம் சரியா அமையும்போது அது இயல்பா நடக்கும்.

தயாரிப்பாளர் ஜீவா, இயக்குநர் ஜீவா இப்படி எல்லாம் அவதாரம் எடுக்கப் போறதா கேள்விப்பட்டோமே?

ஏற்கனவே தயாரிப்பாளர்தான். அது அப்பாதான்னு உங்களுக்கும் தெரியும். புதிதா ஒரு பேனர்ல தொடங்கலாம் என்று ஒரு திட்டம் இருந்தது. அந்த பேனரில் சோதனை முயற்சியிலான படங்களை மட்டுமே எடுக்க நினைச்சேன். நண்பர்கள் வேண்டாம்னு சொன்னாங்க. அதனால அது அப்படியே இருக்கு. எதிர்காலத்தில் பார்க்கலாம்.

முதல்ல இயக்குநராகிற ஆசை இருந்துச்சு. இப்பக்கூட ஒரு ஆக் ஷன் பெல்ட், ஒரு அழகான காதல் காட்சி இயக்க விட்டால் நல்லா இயக்குவேன். முழு நம்பிக்கை இருக்கு. ஆனா இப்போதைக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய நடிகர்கள்ல ஒருத்தனா இருக்கேன். அதை அழகா நகர்த்திக் கொண்டு போகலாம்.

ஷாருக், அமீர்கான், ஹிர்த்திக் ஆகிய முன்னணி பாலிவுட் நடிகர்கள் எல்லாம் அவங்க படத்தின் புரமோஷனுக்காக இங்கே வருகிறார்கள். நம்ம ஊரில் உள்ள மாஸ் ஹீரோக்கள் ஒதுங்குகிறார்களே?

நான் தமிழ்நாடு முழுக்க டூர் போய்த்தான் எப்படி நடிக்கணும் என்பதை கற்றுக்கொண்டேன். புரமோஷன் விஷயத்தில் பெரிய ஹீரோக்கள் மட்டும் என்று இல்லை. எல்லோருமே வர வேண்டும். அப்போதுதான் தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைக்கும். அந்த கலாச்சாரம் நம்மிடமும் வரணும். அதுதான் என் ஆசையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x