Last Updated : 22 Feb, 2014 12:00 AM

 

Published : 22 Feb 2014 12:00 AM
Last Updated : 22 Feb 2014 12:00 AM

அடுக்குமாடி வீடுகளை நாடும் மக்கள்

தமிழகத்தில் உள்ள பெரிய மாநகராட்சிகளில் சேலம் மாநகராட்சியும் ஒன்று. 90 சதுர கி.மீ. அளவில் பரந்து விரிந்துள்ள நகரம். மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் வசிக்கின்றனர். தமிழகத்தில் வளர்ந்துவரும் நகரங்களில் முன்னணியில் இருந்து வரும் சேலத்தில் வர்த்தக, தொழில் தொடர்பு காரணமாகப் பல்வேறு தரப்பினரும், இங்குக் குடியேறி வசித்து வருகின்றனர். இதன் காரணமாகச் சேலத்தில் வீட்டுத் தேவை அதிகரித்துவருகிறது. இதனால், சேலம் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகியவண்ணம் உள்ளன.

சேலத்தில் கோரிமேடு, அரிசிபாளையம், அஸ்தம்பட்டி, அழகாபுரம், மெய்யனுார், ஜங்ஷன் உள்ளிட்ட பகுதியில் அழகிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. நான்கு தளம் முதல் ஆறு தளம் வரை அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி, விற்பனை செய்கின்றனர். ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 16 முதல் 32 வீடுகள் வரை கட்டப்படுகின்றன. முதல் தளம், இரண்டாம் தளம் என ஒவ்வொரு தளத்திற்கும் ஏற்ற வகையில், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 650 சதுர அடியில் இருந்து 1050 சதுர அடி வரையிலான வீடுகளைக் கட்டி விற்பனை செய்கின்றனர். வரவேற்பறை, சமையல் அறை, குளியலறை இணைந்த படுக்கை அறை, சிறிய அளவிலான பூஜை அறை, பால்கனி என வாடிக்கையாளரைக் கவரும் வகையில், கனகச்சிதமாகக் குடியிருப்புகள் கட்டி விடுகின்றனர். அழகிய வண்ணப்பூச்சும், அடக்கமாகப் பொருட்களை வைத்துக் கொள்ள அலமாரிகளும், காற்றோட்ட வசதியும் காணும் போது, அடுக்குமாடிக் குடியிருப்பை மக்கள் விரும்பவே செய்கின்றனர்.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்ன விலையில் விற்கப்படுகின்றன? சேலத்தைச் சேர்ந்த பொறியாளர் ஆறுமுகம் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். ‘‘சேலம் மாநகரின் மையப் பகுதியில் சதுர அடி 3,000 முதல் 10,000 ரூபாய் வரை நிலம் விற்பனை செய்யப்படுவதால், சொந்த வீடு கனவில் மிதப்பவர்கள், புறநகர்ப் பகுதியை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்க விரும்பும் நகரப் பகுதியில் உள்ளவர்கள் 35 லட்சம் ரூபாய் முதல் 70 லட்சம் ரூபாய் வரை ஒதுக்கி வைத்துக் கொண்டால்தான் வாங்க முடியும். தற்போது அரசு அலுவலர்கள், தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், நகரப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளைத் தேர்ந்தெடுத்து வாங்குகின்றனர்’’ என்கிறார் இவர்.

சேலம் மாநகரில் பல்வேறு கட்டுமான நிறுவனங்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்கின்றனர். தற்போது ரியல் எஸ்டேட் போட்டி காரணமாக வீடுகளின் மதிப்பில் 10 சதவீதம் வரை குறைத்து அளிக்கவும் பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x