மாதம் ரூ.35 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் கற்பிக்கலாம்

மாதம் ரூ.35 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் கற்பிக்கலாம்
Updated on
1 min read

பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற திட்டத்தை இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களுக்கும் கொண்டுசேர்க்கவும் அரசாங்கத்துடன் கைகோத்தும் அரசாங்கத்துக்கு இணையாகவும் பல அமைப்புகள் செயலாற்றிவருகின்றன. இந்த இலக்கோடு இயங்கிவரும் நிறுவனங்களில் ஒன்றான அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை 2019-ம் ஆண்டுக்கான கல்வி ஊக்கத்தொகை திட்டத்தைத் தற்போது அறிவித்திருக்கிறது. 

புதுச்சேரி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், சட்டீஸ்கர் ஆகிய யூனியன் பிரதேசம், மாநிலங்களில் உள்ள வெவ்வேறு அரசுப் பள்ளிகளில்  மார்ச் 2019 தொடங்கி 150 நாட்கள் கல்வி கற்பிக்க மாதம் ரூ. 35 ஆயிரம் ஊக்கத்தொக்கை வழங்கவிருப்பதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தேவையான தகுதி

நான்காண்டுகள் முதல் பத்தாண்டுகள்வரை ஆசிரியர் பணி அனுபவமிக்கவர்கள், ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான நான்காண்டுகள் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கில மொழிப் புலமை அவசியம். அதுமட்டுமின்றித் தமிழ் அல்லது இந்தி அல்லது தெலுங்கு அல்லது கன்னடம் ஆகிய ஏதோ ஒரு பிராந்திய மொழியில் ஆளுமை அவசியம்.

அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ஊக்கத்தொகைக்குரிய தேர்வு அக்டோபர் 28 அன்று இணையவழியில் நடத்தப்படும்.  அப்ஜெக்டிவ் முறை, கட்டுரை எழுதுதல் என இரண்டு பிரிவில் ஒரே தேர்வு நடத்தப்படும். இத்தேர்வில் ஆங்கிலம், அடிப்படைக் கணிதம், பகுத்தாராய்தல் (reasoning), பொது அறிவு, சமூக-பொருளாதார அரசியல் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும்.

உரிய தகுதியுடையவர்கள் www.azimpremjifoundation.org/fellowship இணையதளத்தில் அக்டோபர் 20வரை விண்ணப்பிக்கலாம். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையில் உள்ள தேர்வு மையத்தில் ஆன்லைன் வழியில் தேர்வு எழுத வேண்டும். கூடுதல் விவரங்களுக்குத் திங்கள் முதல் வெள்ளிவரை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை 1800 274 0101 என்ற கட்டணம் இல்லாத் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in