Last Updated : 17 Mar, 2019 12:50 PM

 

Published : 17 Mar 2019 12:50 PM
Last Updated : 17 Mar 2019 12:50 PM

ஆய்வும் முடிவும்: பெண்ணின் திருமண வயது என்ன?

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ‘கல்வியே பெண்களுக்கான விடுதலையைப் பெற்றுத்தரும்’ எனும் முழக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் தமிழகத்தில் பள்ளிகளுக்குச் சென்றுவருவதில் உள்ள சிரமம், பாலினப் பாகுபாடு, சமூக – பொருளாதார அழுத்தம் ஆகியவையே குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதற்கான முக்கியக் காரணங் களாக உள்ளன  என ‘சம கல்வி’ இயக்கமும் ‘குழந்தைகள் உரிமைகளும் நீங்களும்’ (CRY) அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி இடைநிற்றலுக்கும் குழந்தைத் திருமணத்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்து இந்த அமைப்பினர் கள ஆய்வு மேற்கொண்டனர். சென்னை, தருமபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய பத்து மாவட்டங்களில் 210 பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் 17 சதவீதம்

இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்கள் 18 வயதுக்குள் திருமணம் செய்துவைக்கப் பட்டுள்ளனர். அவர்களில் 21 சதவீதத்தினர் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு மணமுடிக்கப் பட்டிருக்கின்றனர். வறுமை, வீட்டுக்கு அருகில் பள்ளி இல்லாதது, தரமான கல்வி கிடைக்காதது, நீண்ட தூரப் பயணம், பாதுகாப்பின்மை, சமூக பொருளாதாரக் காரணிகள் போன்றவற்றால் அந்தப் பெண்கள் குழந்தைத் திருமணத்துக்கு ஆளாக்கப்பட்டதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 60 சதவீதத்தினர் தங்கள் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளிகள் இல்லாததால் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். சாதி, பாலினப் பாகுபாடு காரணமாகப் பள்ளியைவிட்டு விலகியதாக 19 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். இள வயதுத் திருமணத்துக்குக் குடும்ப வறுமையே காரணம் என 18  சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறையாத குழந்தைத் திருமணங்கள்

நாட்டில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களில் 17 சதவீதம் தமிழகத்தில்தான் நடக்கிறது எனத் தேசியக் குடும்ப சுகாதார ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  தருமபுரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கள ஆய்வில் பங்கேற்ற பெண்களில் பெண்ணின் சரியான திருமண வயது என்ன என்பது குறித்து 80 சதவீதப் பெண்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்ட 60 சதவீதப் பெண்கள் சிக்கலான பிரசவத்தை எதிர்கொண்டுள்ளனர். மேலும், 50 சதவீதத்தினருக்குப் பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொண்டபோதும் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதைத் தடுக்க முடியாத நிலையே நீடிக்கிறது. இதற்குத் தீர்வாகக் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும். குழந்தைத் திருமணத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளைத் தினசரி நடவடிக்கையாக அரசு அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்; குழந்தைத் திருமணம் தண்டனைக்குரிய குற்றம் என்பதைப் பஞ்சாயத்து அளவில்  வலியுறுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை அரசின் கவனத்துக்கு இந்த அமைப்பினர் கோரிக்கையாக வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x