Last Updated : 11 Mar, 2019 11:28 AM

 

Published : 11 Mar 2019 11:28 AM
Last Updated : 11 Mar 2019 11:28 AM

ஏன் வேண்டும் இந்த மாற்றம்?

உலகில் அதிகம் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 15 நகரங்களில் 12 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. மாசு என்பதைப் பெரும்பாலும் நிலம் மற்றும் நீர் என மட்டுமே சுருக்கிக் கொள்கிறோம். கண்ணுக்குத் தெரியவில்லை என்பதற்காகவே காற்றை நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அதனால் தானோ என்னவோ ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் கூட, காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்

கைகள் பெரிதாக இல்லை. உலக சுகாதார மையம் பரிந்துரைக்கும் அளவை விட டெல்லியில் ஆறு மடங்கு அதிகமாகக் காற்று மாசுபட்டிருக்கிறது. நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு போன்ற வாயுக்களால் காற்று விஷமாகிக் கொண்டிருக்கிறது.

ஆட்டோமொபைல் துறை எப்படி ஒரு நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதேநேரம் சுற்றுச்சூழல் மாசுபாட்டிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இன்றையப் பொருளாதார சூழலில் ஆட்டோமொபைல் துறையை அவ்வளவு எளிதாக வேண்டாம் என்று ஓரம்கட்டி விட முடியாது. அதேசமயம் வளர்ச்சிக்காக இயற்

கையை நாசப்படுத்தவும் முடியாது. அதனால் ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு தர நிர்ணய முறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் புகை விதிகள். வாகனங்கள் வெளியிடும் புகையால் காற்று மாசுபடுவது புவி வெப்பமயமாதலுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. எனவேதான், பிஎஸ் 6 தர நிர்ணய முறைக்கு விரைவில் வாகனங்கள் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

2016-ல் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. கார்பன் வெளியீட்டை 33-55% சதவீதம் குறைப்பதாக உறுதியளித்தது. ஏற்கெனவே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இன்னும் சில வளர்ந்த நாடுகள் அனைத்திலும் பிஎஸ் 6 தர நிர்ணய முறை பின்பற்றப்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இந்த தர நிர்ணயம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால், இந்தியாவில் 2020-ல் தான் அமல்படுத்தப்பட உள்ளது.

முன்னதாக, இந்தியாவில் பிஎஸ் 5 தர நிர்ணயம் 2021-லும், பிஎஸ் 6 தர நிர்ணய முறை 2024-லும் அமல்படுத்தப்படுவதாகத்தான் இருந்தது. ஆனால், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு கார்பன் வெளியீட்டைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தினால் பிஎஸ் 5-க்கு முன்னதாகவே 2020-ல் பிஎஸ் 6 தர நிர்ணய முறையை அமல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு ஆட்டோமொபைல் துறை நிறுவனங்களிடம் ஆதரவு குறைவாகவே உள்ளது. 

காரணம், தற்போது உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்கும் வாகனங்கள் அனைத்தும் பிஎஸ் 4 தர நிர்ணயம் கொண்டவை. பிஎஸ் 6 தர நிர்ணய முறைக்கு வாகன உற்பத்தியை மாற்றுவதற்காக பல இழப்புகளைச் சந்திக்க நேரிடும், நஷ்டம் உண்டாகும் என்றெல்லாம் கருத்து சொல்கிறார்கள்.

சந்தையிலும் பிஎஸ் 6 வாகனங்கள் பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. நுகர்வோர் தரப்பிலும் பிஎஸ் 6 வாகனங்கள் குறித்த விழிப்புணர்வோ, வரவேற்போ சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பிஎஸ் 6 தர நிர்ணய முறையில் சில மாடல் கார்களை உருவாக்கி வருகின்றன. 2020-ல்பிஎஸ் 6 வாகனங்கள் அதிக அளவில் அறிமுகமாவதைப் பார்க்கலாம்.

yennjpg

பிஎஸ் 6 தர நிர்ணய முறையைப் பின்பற்றுவதன் மூலம் நம்மால் பெட்ரோல் இன்ஜினிலிருந்து வெளியாகும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை 25 சதவீதம் குறைக்க முடியும். டீசல் இன்ஜினில் 68 சதவீதம் அளவுக்கு குறைக்க முடியும். டீசல் இன்ஜினிலிருந்து வெளியிடப்படும் ஏனைய வாயுக்கள், மாசுக்களை 80 சதவீதம் அளவுக்குக் குறைக்க முடியும்.

OBD எனப்படும் ஆன்-போர்டு டயக்னாஸ்டிக்ஸ் மற்றும் ரியல் டிரைவிங் எமிஷன் உள்ளிட்ட வசதிகள் பிஎஸ் 6 தர நிர்ணய முறையில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் உடனுக்குடன் வாகனத்தால் உண்டாகும் மாசுபாட்டை கண்காணிக்க முடியும். அதற்கேற்ப மாசுபாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் திட்டமிட முடியும்.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தர நிர்ணய விதிமுறைகளை நேர்மையுடன் பின்பற்ற வேண்டும். சமீபத்தில் புகை விதிகளில் மோசடி செய்ததாக ஃபோக்ஸ்வேகனுக்கு ரூ. 500 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற தவறுகள் இனியும் நடக்கக் கூடாது. இல்லையென்றால் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் எந்த முயற்சியும் வீணாகத்தான் போகும்.

பிஎஸ் தர நிர்ணய முறையை அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களும் சவால்களும் உள்ளன. அதையெல்லாம் தாண்டி அது செயல்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஐரோப்பாவில் பிஎஸ் 6 தர நிர்ணய முறைகளை முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவர 9 ஆண்டுகள் ஆனது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஒரு நொடியில் செயல்படுத்த முடிந்த அரசால், இதை செய்ய முடியாதா என்ன?

- saravanan.j@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x