Published : 07 Feb 2019 06:44 PM
Last Updated : 07 Feb 2019 06:44 PM

நாவல் சினிமா

‘விசாரணை’ படத்தைத் தொடர்ந்து, சமகால இலக்கியத்திலிருந்து மீண்டும் தனது படத்துக்கான கதையாகத் தேர்வுசெய்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.  கரிசல் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற புகழ்பெற்ற நாவலைத் தழுவியே தனது ‘அசுரன்’ படத்துக்குத் திரைக்கதை அமைத்திருக்கிறாராம் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்தப் படத்தின் மூலம் மலையாளப் படவுலகின் பிரபல நட்சத்திரமான மஞ்சுவாரியார் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

 

சுவரொட்டி இயக்கம்

ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் ‘டூலெட்’ திரைப்படம், இந்திய அளவில் இதுவரை எந்தத் திரைப்படமும் செய்யாத சாதனையை உலக அரங்கில் நிகழ்த்தியிருகிறது. 84 சர்வதேசப் படவிழாக்களின் போட்டிப் பிரிவுக்கு அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டு இதுவரை 34 சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறது. வரும் பிப்ரவரி 21-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், தன்னார்வலர்கள் தாமாகவே முன்வந்து ‘டூலெட்’ படத்துக்குச் சுவரொட்டி இயக்கம் தொடங்கியிருப்பதும் இதுவரை எந்தத் தமிழப் படத்துக்கும் நடந்திராத ஒன்று.

 

டிஸ்யூம் ஒத்திகை!

இரட்டையர்கள் திரையுலகில் அடையாளம் பெறுவது அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது. சென்னையில் பிறந்து வளர்ந்த அன்புமணி, அறிவுமணி ஆகிய இருவரும் தங்களது பெயர்களை ‘அன்பறிவ்’ என ஒரே பெயராக மாற்றிக்கொண்டு தென்னிந்திய மொழிகள் நான்கிலும் சுமார் 100 படங்களுக்குச் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றிப் புகழ்பெற்றிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளைப் படமாக்கும் முன்பு இவர்களது ஸ்டண்ட் அகாடமிக்கு வந்து வடிவமைக்கப்பட்ட சண்டைக்காட்சிக்கு ஒத்திகை பார்த்துச் செல்கிறார்கள் பல இயக்குநர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x