Published : 31 Dec 2018 11:36 AM
Last Updated : 31 Dec 2018 11:36 AM
ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ் தனது புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. சி கிளாஸ் செடான் மாடலாக வந்துள்ள இந்த காரின் விலை ரூ. 43.46 லட்சமாகும். புதிய பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பத்தோடு இது வந்துள்ளது.
கடந்த செப்டம்பரில்தான் சி கிளாஸ் பிரிவில் மேம்படுத்தப்பட்ட ரகம் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒற்றை டீசல் இன்ஜினை கொண்டதாக இருந்தது. தற்போது வந்துள்ள மாடல் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டருடன் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டதாக அறிமுகமாகியுள்ளது. இதில் 48 வி மைல்ட் ஹைபிரிட் சிஸ்டம் உள்ளது. இது 14 ஹெச்பி திறனை 160 நியூட்டன் மீட்டர் டார்க் இழு திறனை வெளிப்படுத்தக் கூடியது. இதன் மூலம் பேட்டரி சக்தி வெளிப்பட்டு ஜெனரேட்டர் போல செயல்படும்.
இதையடுத்து இதில் உள்ள இன்ஜின் 184 ஹெச்பி திறனை, 5,800 ஆர்பிஎம் அளவை வெளிப்படுத்தக் கூடியது. இதில் 9 கியர்களைக் கொண்ட கியர் பாக்ஸ் உள்ளது. இதில் 7.7 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதில் அதிகபட்ச வேகம் மணிக்கு 239 கி.மீ. ஆகும்.
பெட்ரோல் மாடலில் தற்போது ஒரே ஒரு மாடல் மட்டுமே புரொகிரஸிவ் என்ற பெயரில் சி கிளாஸில் அறிமுகமாகியுள்ளது. இதன் முகப்பு விளக்கு, சன் ரூஃப் மேற்கூரை, சொகுசான பயணத்தை உறுதி செய்யும் மிருதுவான தோல் இருக்கைகள், பருவ நிலை கட்டுப்பாட்டு வசதி, 10.25 அங்குல தொடு திரை மிகச் சிறந்த பொழுது போக்கை அளிக்கிறது.
இந்த கார் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், ஆடி ஏ 4, வால்வோ எஸ் 60, ஜாகுவார் எக்ஸ்இ ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT