Published : 18 Aug 2014 10:00 AM
Last Updated : 18 Aug 2014 10:00 AM
பள்ளி, கல்லூரி படிப்புகளை முடிக்கும் மாணவ-மாணவிகள் அரசு வேலைக்காகத் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்வது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளாக, பள்ளி மாணவர்கள் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 கல்வித்தகுதி பதிவுகளைப் பள்ளியிலேயே முடித்துவிடுகிறார்கள். முன்பு போல அவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குச் செல்வதில்லை. தமிழ்நாட்டில் 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும், 2 மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களும், சென்னையில் 3 சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் செயல்படுகின்றன.
அலைய வேண்டாம்
பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், பட்டமேற்படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில்கல்வி படிப்புகளைத் தங்கள் மாவட்டத்துக்கு ஏற்ப, சென்னையில் அல்லது மதுரையில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ பதிவுசெய்ய வேண்டும். தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்காக மதுரையில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகமும், வடமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகமும் இயங்குகின்றன.
அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் ஆன்லைன் வசதி செய்யப்பட்டிருப்பதால், பதிவுதாரர்கள் மாவட்ட அலுவலகங்களுக்கும், மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கும் நேரில் சென்று பதிவுசெய்ய வேண்டிய கட்டாயமில்லை.அலைய வேண்டாம். ஆனால் விரும்பினால் நேரில் சென்றும் பதிவுசெய்யலாம். வீட்டில் கணினி வசதி இருந்தால் வீட்டில் இருந்தபடியோ அல்லது ஏதாவது பிரவுசிங் மையத்திற்குச் சென்றோ ஆன்லைனில் கல்வித் தகுதியைப் பதிவுசெய்துவிடலாம்.
ஆன்லைனில் பதிவு
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் ( >www.tnvelaivaaippu.gov.in) சென்று லாக்-இன் செய்ய வேண்டும். அதில் பதிவு செய்ய விரும்புபவர் ஒரு யூசர் ஐ.டி.யை ( உபயோகிப்பாளர் அடையாளக்குறியீடு) உருவாக்கிக்கொள்ள வேண்டும். பெயர், பாலினம், இ-மெயில் முகவரி, யூசர் ஐடி, பாஸ்வேர்டு, தந்தை பெயர், பிறந்த தேதி, செல்போன் எண், ரேஷன் கார்டு எண் ஆகிய விவரங்களை நாம் அந்த இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். யூசர் ஐடி-யை உருவாக்கிய பின்னர் கல்வித் தகுதி விவரங்களை மளமளவெனப் பதிவுசெய்துவிடலாம். பதிவுசெய்ய வேண்டிய கல்வித் தகுதி சான்றிதழ் விவரங்கள், முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
அடையாள அட்டை
இந்த விவரங்களைப் பெற்ற பிறகு அந்த இணைய தளத்தில் வேலைவாய்ப்பு பதிவு எண் அடங்கிய பதிவு அட்டை உருவாகும்.அதை ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம். வேலைவாய்ப்பு பதிவு எண் என்பது சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் கோட் எண், பதிவுசெய்த ஆண்டு, பாலினம், பதிவுஎண் ஆகிய விவரங்கள் உள்ளடக்கிய 16 இலக்க எண் ஆகும். பிறந்த தேதிதான் பதிவுதாரர்களுக்கான பாஸ்வேர்ட்.
ஏற்கெனவே உள்ள விதிமுறையின்படி வேலைவாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் புதுப்பித்து வர வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தக் கட்டுப்பாடு கிடையாது) அப்போதுதான் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) நடப்பில் இருக்கும். இல்லாவிட்டால் காலாவதியாகிவிடும். ஆன்லைனிலேயே பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், கூடுதல் கல்வித் தகுதிகளையும் பதிவுதாரர்களே ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிடலாம்.
அதுமட்டுமல்லாமல், மாவட்டத்திற்குள் முகவரி மாற்றம் ஏற்பட்டால் அதையும் ஆன்லைனில் திருத்தம் செய்துகொள்ளலாம். மாவட்டம் விட்டு மாவட்டம் முகவரி மாறினால் மட்டும் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும். ஆன்லைனில் பதிவுசெய்யும்போது விவரங்களைத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டால் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குச்
சென்றுதான் திருத்தம்செய்ய முடியும். பதிவுதாரர்கள், தவறாகக் குறிப்பிட்ட விவரங்களை ஆன்லைனில் திருத்தம் செய்ய இயலாது. எனவே, ஆன்லைனில் பதிவு செய்யும் போது கவனமும், பொறுமையும் மிகவும் அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT