Published : 08 Jul 2018 10:45 AM
Last Updated : 08 Jul 2018 10:45 AM
புத்தகங்கள் எனக்கு பெரிய பொக்கிஷம். சிறுவயதிலேயே நிறையப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். ஆனால், சீக்கிரமாக என்னைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். என் கணவர் வணிகவியல் துறையில் பேராசிரியர். அதனால் வணிகம் சம்பந்தமாகப் பல புத்தகங்கள் அவரின் அலமாரியில் இருக்கும். பேறுகாலத்துக்காக அம்மா வீட்டில் இருந்தபோது ஒரு பெரியவர் பை நிறைய புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுத்தார். அப்படி ஒவ்வொரு வீட்டிலும் கொடுப்பது அவருக்கு வழக்கமாம். அப்படித்தான் மீண்டும் வாசிப்பைத் தொடர்ந்தேன்.
குழந்தைகள் பிறந்து வளர்ந்ததும் அவர்களைப் பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பும் வழியில் புத்தகக் கடைகளில் விற்கப்படும் வார இதழ்களை வாங்கிப் படிக்க ஆசையாக இருக்கும். அதேபோல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சிறிது வெளிச்சம்’, ‘நகுலன் வீட்டில் யாருமில்லை’, ‘துணையெழுத்து’, ‘கதாவிலாசம்’ ஆகிய புத்தகங்களைப் படித்திருக்கிறேன். எஸ்.ரா.வின் ‘கதாவிலாசம்’ புத்தகம் எப்போதும் என் கைப்பையில் இருக்கும். இந்நிலையில் என் அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அவரின் இறப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் சிறிது காலம் படிக்காமல் இருந்தேன்.
ஆனால், வாசிப்புதான் என்னை மீண்டும் பழைய மனுஷியாக்கியது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ புத்தகத்தில் வரும் ஹென்றி என்ற கதாபாத்திரத்தோடு நானும் பயணிப்பதுபோல் இருக்கும். அருந்ததி ராய் எழுதிய ‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்’, ஞானியின் ‘தவிப்பு’ என என் புத்தக வாசிப்புப் பட்டியல் நீண்டது.
தோழமையாக கூடவே இருக்கக்கூடிய அரிய பொக்கிஷமாகவே புத்தகங்களைப் பார்க்கிறேன். வாசிப்பின் வழியே நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ள முடியும். நான் குறிப்பிட்ட அனைத்துப் புத்தகங்களையும் வாசித்து முடிக்கும்போது கண்ணீரோடுதான் அவற்றை மூடி வைப்பேன். வாழ்க்கையில் கஷ்டமாக இருக்கும்போதெல்லாம் புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கிவிடுவேன். வாசித்த புத்தகமாக இருந்தாலும் மீண்டும் வாசிப்பேன். பிள்ளைகளுக்குப் புத்தகங்களின் அவசியத்தை வலியுறுத்திப் படிக்கச் சொல்வேன். இதை வாசிக்கும் நீங்களும் புத்தகங்களை வாசித்துப் பாருங்களேன்; மன அமைதி, மகிழ்ச்சி, தெளிவு, தெம்பு என எல்லாமே கிடைக்கும்.
- ரேச்சல், திருச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT