Last Updated : 01 May, 2018 10:33 AM

 

Published : 01 May 2018 10:33 AM
Last Updated : 01 May 2018 10:33 AM

புதுத் தொழில் பழகு 03: தொழிலான சொந்த அனுபவம்

 

தொ

ழில் தொடங்க இன்றைக்கு இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அதனால் தொழில் தொடங்க வழிகாட்டும் தனி வகுப்புகளும் அதிரித்துள்ளன. அந்த வகுப்புகள் பல விதமான தொழில்களை முன்மொழிகின்றன. இதன் விளைவாக உடனடி லாபம் என்பதை மட்டும் நோக்கமாகக்கொண்டு அறியாத ஒரு தொழிலைச் சட்டெனத் தொடங்குவதும் அதிகரித்துவருகிறது. இதற்கிடையில் தன் அன்றாட வேலைகளில் ஒன்றையே தொழிலாக மாற்றி வெற்றி கண்டவர், தீபக் ராஜாராம். அவரது செல்ல நாய்க்குட்டிக்கு உணவளிப்பதுதான் அந்த வேலை.

நிரந்தர தீர்வாகாது

தீபக், சிறுவயதில் ஃபிளஃபி என்னும் நாய்க் குட்டியை வளர்த்துவந்தார். பிரியமான அந்த நாய் நோயில் இறந்துவிட்டது. அதன் இழப்பை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதன் பிறகு அவருடைய பெற்றோர் இன்னும் சில நாய்க்குட்டிகளை வாங்கித் தந்தார்கள். ஆனால், ஒவ்வாமையால் அவற்றுக்கும் புதிய புதிய நோய்கள் வந்தன. அந்த நேரத்தில் மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது அவர் ஊசி போடுவார். ஆனால், அது நிரந்தரத் தீர்வாக இருக்காது. இதற்குக் காரணம் என்ன என தீபக் தேடத் தொடங்கினார். அதற்குக் கொடுக்கும் உணவுதான் முக்கியக் காரணம் எனக் கண்டறிந்தார்.

“10 வருஷத்துக்கு முன்னால் நாய்களுக்கு எந்தெந்த உணவு வகைகளைக் கொடுக்கலாம், எந்தெந்த உணவு வகைகளைக் கொடுக்கக் கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு இல்லை. உதாரணத்துக்கு வெங்காயம் நாய்களுக்கு ஆகாது. ஆனால், நாம் வெங்காயம் போட்டு சமைத்த சாப்பாட்டை நாய்களுக்குத் தருவோம். அதுபோல நாய்கள் காய்கறி சாப்பிடுவதில்லை என்ற மூடநம்பிக்கையும் நமக்கு இருக்கிறது” எனச் சொல்லும் தீபக், நாய் உணவு குறித்து இணையம் வழி நிறைய கட்டுரைகளைத் தேடிப் படித்தார். உலகின் பிரபலமான விலங்கு ஊட்டச்சத்தாளர்களின் காணொலிக் காட்சிகள் வழியாகவும் நிறையக் கற்றார்.

செல்லப் பிராணிக்கு நல்லது!

இதன் வழியாக நாய்களுக்குத் தேவையான எல்லாச் சத்துகளையும் உள்ளடக்கிய உணவை அவரே தயாரிக்கலாம் என நினைத்தார். “ஏனெனில் இந்தியாவில் செல்லப் பிராணிகளுக்கு முறையான உணவு கிடைப்பதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது கிடைக்கிறது. அதே நேரம் இந்தியாவில் செல்லப் பிராணிகள் வளர்ப்பு புதிய சந்தையையும் ஏற்படுத்தியுள்ளது” எனச் சொல்லும் தீபக், தன்னுடைய நாய்களுக்கு மட்டுமல்லாது அந்த உணவைச் சந்தைப்படுத்தவும் முடிவெடுத்தார்.

ஆனால், அதில் சில தடங்கல்கள் வந்துள்ளன. செல்லப் பிராணிகளுக்கான உணவு தயாரிக்கும் இயந்திரங்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை. அதற்கான பிரத்யேகமான இயந்திரங்கள் மேலை நாடுகளில்தான் இருந்தன. அவற்றை இறக்குமதிசெய்வது அதிகச் செலவாகும் என்பதால், அங்குள்ள நிறுவனத்திடம் உணவுக்கான குறிப்புகளைக் கொடுத்துத் தயாரிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளார். அதன்படி இங்கிலாந்திலிருந்து உணவுப் பண்டமாக இறக்குமதிசெய்துள்ளார். அப்படி அவரது குறிப்புகளுடன் தயாரிக்கப்பட்ட உணவுதான் ‘குட்னஸ்’ (‘Goodness’).

செல்லப் பிராணிகளுக்கு நன்மை தரும் உணவு என்பதால் ‘குட்னஸ்’ எனப் பெயரிட்டுள்ளார். உணவு தயாராகிவிட்டத பிறகு, அதைச் சந்தைப்படுத்துவதில் மீண்டும் சிக்கல் வந்தது. “இங்கே செல்லப் பிராணிகளுக்கான உணவு விற்பவர்களும் பலசரக்குக் கடை போலத்தான் அதை நடத்துகிறார்கள். பிரபலமான நிறுவனத் தயாரிப்புகளைத்தான் அவர்கள் வாடிக்கையாளர்களுக்குப் பரிந்துரைக்கிறார்கள். அந்தப் பிராணிக்கு என்ன சத்து தேவை என்பதை அறிந்து பரிந்துரைப்பதில்லை. இதனால் நேரடியாகச் சந்தைப்படுத்துவது எளிதானதாக இல்லை” என்கிறார் தீபக்.

அதனால் இணையம்வழி ‘குட்ன’ஸைச் சந்தைப்படுத்தி உள்ளார். அது சாதகமான தொடக்கத்தைத் தந்துள்ளது. ஆனால், முதல் சில மாதங்களுக்கு அவர் ரூ.10,000 மட்டுமே லாபமாக ஈட்டியுள்ளார். ஆனால், துவண்டுவிடாமல் தொடர்ந்து உழைத்துள்ளார். அவரது விடா முயற்சியால் இன்று லட்சங்களில் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்; அவரது நிறுவனம் செல்லப் பிராணிகளுக்கான இணைய விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x