Published : 05 Jun 2018 11:31 AM
Last Updated : 05 Jun 2018 11:31 AM

சிறப்புக் கேள்வி நேரம்: மண்ணின் காவலர்கள்

1. காந்தியவாதியும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளருமான அவர், 1964-ல் ‘தஷோலி கிராம ஸ்வராஜ்ய சங்க’த்தை நிறுவியவர். இந்த அமைப்பே இமயமலை அடிவாரக் காடுகளில் மரங்களை கட்டிப்பிடித்துக்கொண்டு பாதுகாத்த சிப்கோ இயக்கத்தின் தாய் அமைப்பு. அதேநேரம் சிப்கோ இயக்கமே இந்தியச் சுற்றுச்சூழல் களப் போராட்டங்களின் தாய் என்று கருதப்படுகிறது. விருதுகள் பல பெற்ற அவருடைய பெயர் என்ன?

2. இந்தியாவின் மிக மோசமான தொழிற்சாலை பெருவிபத்தாகக் கருதப்படும் போபால் விஷ வாயுக் கசிவுக்கு 20,000 பேர் பலியாகினர். இதற்கு நீதி கேட்டு விழிப்புணர்வுப் பிரசாரத்தை நடத்தியதுடன், யூனியன் கார்பைடு-டோ நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து 32 ஆண்டுகளாகப் போராடியும் வருவதற்காக 2004-ல் ‘கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசை’ பெற்றவர்கள் யார்?

3. சிப்கோ இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான காந்தியவாதி. இமயமலை அடிவாரத்தில் நிலநடுக்க ஆபத்துள்ள பகுதியில் தேஹ்ரி அணை கட்டுவதை எதிர்த்து தீவிர போராட்டங்களை நடத்தியவர். கார்வால் மலைப்பகுதிகளைப் பாதுகாப்பதற்காக 20,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்ட இந்த மூத்த சூழலியல் செயல்பாட்டாளரின் பெயர் என்ன?

4. சுற்றுச்சூழல் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்ததற்காக அறியப்பட்டவர். தாஜ் மகாலை பாதுகாப்பது, கங்கையைத் தூய்மைப்படுத்துவது, கடற்கரையில் இறால் பண்ணைகளைத் தடுப்பது, பள்ளி-கல்லூரிகளில் சுற்றுச்சூழல் கல்வியை வழங்குவது உள்ளிட்டவற்றுக்காக 1984-ம் ஆண்டு முதல் பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்த அவருடைய பெயர் என்ன?

5. இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், ‘பெண்ணிய சுற்றுச்சூழல்’ எனும் புதிய துறையின் நிறுவனர்களில் ஒருவர். இந்திய மரபு சார்ந்த பொருட்களுக்கான காப்புரிமை, விதைப் பாதுகாப்பு, உள்ளூர் தொழில் பாதுகாப்புக்காகப் போராடிவருபவர். பசுமைப் புரட்சியைக் கடுமையாக விமர்சித்து, இயற்கை வேளாண்மையை ஊக்குவித்துவருபவர். எழுத்திலும் பிரபலமான அவருடைய பெயர் என்ன?

6. கோவாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல், வேளாண் செயல்பாட்டாளர். சுற்றுச்சூழல் கண்காணிப்பு-செயல்பாட்டுக் குழுவான ‘கோவா அறக்கட்டளை’, ‘அதர் இந்தியா பிரஸ்’ பதிப்பகம் ஆகியவற்றின் நிறுவனர். கோவாவில் கனிமச் சுரங்கங்களுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வரும் இவர், இயற்கை வேளாண் இயக்கத்துக்கு மிகப் பெரிய உந்துசக்தியும்கூட. இவர் யார்?

7. நர்மதை நதி மீது சர்தார் சரோவர் அணையைக் கட்டுவதற்கு எதிராக நெடிய போராட்டத்தை முன்னெடுத்து, பேரணைகளுக்கு எதிரான விவாதத்தை உலக அளவில் பரவலாக்கியவர். பெரும் திட்டங்களால் எளிய, விளிம்புநிலை மக்கள் வாழ்வாதாரத்தை இழப்பதை தேசிய அளவிலான பிரச்சினையாக்கி இன்றைக்கும் போராடி வரும் அவருடைய பெயர் என்ன?

8. பாலைவனமாகக் கருதப்படும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், தடுப்பணைகள் மூலம் நீர் சேகரிப்பைச் சாத்தியப்படுத்திய சாதனையைப் புரிந்ததற்காக, ‘இந்தியாவின் தண்ணீர் மனிதன்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

9. தனி இயக்கம்போலச் செயல்படும் நாட்டின் முன்னணி சுற்றுச்சூழல் இதழான ‘டவுன் டு எர்த்’ இதழின் ஆசிரியர். புதுடெல்லி அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் (Center for Science and Environment) தலைமை இயக்குநர். குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி முதல் கோழிப் பண்ணைகளில் ஆன்டிபயாட்டிக்ஸ் வரையிலான பிரச்சினைகளை இந்த மையமே வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. அவருடைய பெயர் என்ன?

10. சமூக உயிரினப் பன்மை குறித்த பதிவேடுகள், கோயில் காடுகளைப் பாதுகாப்பது, பாலூட்டிகள்-பறவைகள்-பூச்சிகள் குறித்த ஆய்வுகள் என நாட்டின் இயற்கை பாதுகாப்புக்குப் பல்வேறு வகைகளில் பங்களித்தவர். பல புத்தகங்களை எழுதியவர். மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளைப் பாதுகாக்க மக்கள் பங்கேற்பை மையமாக்க வேண்டும் என்று இவர் தலைமையிலான குழு முன்வைத்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் யார்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x