Published : 21 May 2018 10:13 AM
Last Updated : 21 May 2018 10:13 AM

பேட்டரி வாகன தயாரிப்பு ஆலைகளுக்கு சலுகை ஆந்திர அரசு அறிவிப்பு

ந்திர மாநில அரசு பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களுக்கு சலுகைகளை அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ. 30 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகளை ஈர்க்க முடியும் என நம்புகிறது.

இதன்படி பேட்டரி கார் தயாரிப்பு நிறுவனங்கள், பேட்டரிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் பேட்டரி சார்ஜிங் மையங்களை உருவாக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சலுகைகளை அளிக்க ஆந்திர மாநில அரசு முடிவுசெய்துள்ளது.

இதன்படி 2024-ம் ஆண்டு வரை மாநிலத்தில் பதிவு செய்யப்படும் பேட்டரி வாகனங்களுக்கான சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தை வாகன உரிமையாளர்களுக்கே திருப்பி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் 10 லட்சம் பேட்டரி வாகனங்கள் இயங்கும் என அரசு எதிர்பார்க்கிறது.

முதலில் மாநிலத்தில் பேட்டரி கார் உற்பத்தி ஆலை அமைக்க வரும் இரண்டு நிறுவனங்களுக்கு அவர்களது மூலதன தொகையில் 10 சதவீதத்தை மானியமாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல முத்திரைத்தாள் பதிவுக் கட்டணம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றையும் திரும்ப அளிக்கவும் முடிவு செய்துள்ளது. இதேபோல இந்நிறுவனங்களுக்கான மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணத்திலும் சலுகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

மாநிலத்தில் நகர்ப்பகுதிகளில் அனைத்தும் பேட்டரி பஸ்களாக மாற்றும் இலக்கு 2024 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து பஸ்களையும் பேட்டரி பஸ்ஸாக மாற்றவும் திட்டமிட்டுள்ளது. மாடல் நகரங்களாக அறிவிக்கப்பட்ட அமராவதி, விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் திருப்பதியில் முற்றிலும் பேட்டரி பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கேற்ப ஒவ்வொரு நகரிலும் 100 சார்ஜிங் மையங்களை மாநில மின்துறை மூலம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x