Published : 08 May 2018 10:48 AM
Last Updated : 08 May 2018 10:48 AM

வரலாறு தந்த வார்த்தை 29: ‘நீட்’டா முடிச்சிட்டாங்க…!

மிழகத்தை ஓரம்கட்ட இன்னொரு முயற்சி. ‘நீட்’ வேண்டாம் என்று போராடியது போய், இப்போது ‘நீட்’ தேர்வைத் தமிழகத்தில்தான் நடத்த வேண்டும் என்று கெஞ்சும் அளவுக்குக் கொண்டுவந்துவிட்டது மத்திய அரசு.

‘சாகிற நேரத்தில் சங்கரா, சங்கரா’ என்று சொல்வது மாதிரி, கடைசி நேரத்தில் வந்து, தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கி, அவர்களைப் பாடாய்ப்படுத்திவிட்டார்கள்.

தேர்வில் கேள்விகள் எப்படி இருக்கும் என்றுதான் அதுவரை மாணவர்கள் யோசித்திருப்பார்கள். ஆனால் கடைசி நேரத்தில், எந்த மாநிலத்தில், எந்தத் தேர்வு மையம், செல்வதற்கு ரயில் டிக்கெட் கிடைக்குமா, எங்கே தங்குவது, என்ன சாப்பிடுவது, துணைக்கு யாரை அழைத்துச் செல்வது, தங்கியிருக்கும் இடத்திலிருந்து தேர்வு மையம் பக்கமா, தூரம் என்றால், அங்கு செல்வதற்குப் பேருந்து வசதி உண்டா, உள்ளூர்க்காரர்களிடம் ஆங்கிலத்தில் பேசி வழி கேட்டால் அவர்களுக்குப் புரியுமா, தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நடந்தபோதே தேர்வெழுத வந்தவர்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்தனவே, வெளிமாநிலங்களில் நிலைமை எப்படியோ என்று பல சந்தேகங்கள், கேள்விகள் அவர்கள் மனதில் எழுந்து, படித்ததை எல்லாம் மறந்துபோகச் செய்துவிட்டன.

வருங்காலத்தில் தமிழகத்துக்கு வர இருக்கும் ஆபத்துகளை முன் அறிவிக்கும்விதமாகத்தான் இந்த நடவடிக்கைகள் எல்லாம் அமைந்திருக்கின்றன. இதுபோன்று, ‘பின் வருவதை முன் உரைக்கும்’ நிகழ்வுகளை, அல்லது, மறைந்திருக்கும் ஆபத்துகள் வெளிப்படையாகத் தெரிவதைப் பற்றி விளக்குவதற்கு ஆங்கிலத்தில் ‘The writing is on the wall’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்கள்.

நாட்கள் எண்ணப்படுகின்றன...

இந்தச் சொற்றொடருக்கான வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், பைபிள் பழைய ஏற்பாடு புத்தகத்தின் பக்கங்களைத் திருப்ப வேண்டும். அதில், தானியல் 5-ம் அதிகாரத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது. பெல்ஷாத்சார் எனும் அரசன் தன் நண்பர்களுக்கு விருந்து கொடுக்கிறான். அந்த விருந்தில், தேவாலயத்தின் பாத்திரங்களை எடுத்து வந்து, அவற்றை மது குடிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். போதை ஏற, ஏற, ‘தானே இறைவன்’ என்ற ரீதியில் பெல்ஷாத்சார் ஆட ஆரம்பித்தான்.

அந்த நேரம், வெட்டுப்பட்ட ஒற்றைக் கை ஒன்று அவர்கள் முன் தோன்றியது. அந்தக் கை, அருகிலிருந்த சுவரில் அராமிக் மொழியில், ‘மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்’ என்ற வார்த்தைகளை எழுதிவிட்டு மறைந்தது. அதற்கான அர்த்தம்: “தேவன் உன் ராஜ்ஜியத்துக்கு முடிவுண்டாக்கினார். நீ தராசிலே நிறுத்தப்பட்டுக் குறை காணப்பட்டாய். உன் ராஜ்ஜியம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது”.

தன்னுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன என்பது பெல்ஷாத்சார் மன்னனுக்குத் தெரியவில்லை. ஆனால், அது மற்றவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஏன், அவனுக்குத் தெரியாமல் போனதென்றால், அவன் பாவச் செயல்கள் செய்வதில் மூழ்கி இருந்தான் என்பதே இந்தக் கதையின் நீதி.

இந்தக் கதையிலிருந்து வந்ததுதான் ‘தி ரைட்டிங் இஸ் ஆன் தி வால்’ என்ற சொற்றொடர்.

அப்படி தமிழகத்தின் சுவரில் எழுதப்பட்டதுதான் ‘நீட்’ தேர்வு..! தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுக்குச் சமாதி கட்ட, அந்தச் சுவரிலிருந்துதான் கல் எடுக்கப்படுமோ..?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x