Last Updated : 19 May, 2018 11:39 AM

 

Published : 19 May 2018 11:39 AM
Last Updated : 19 May 2018 11:39 AM

நலம், நலம் அறிய ஆவல் 35: நீர்க்கடுப்புக்கு நீரிழிவு காரணமா?

எனக்கு வயது 42. கடந்த 5 ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்தம் உள்ளது. நீரிழிவும் உள்ளது. இரண்டுக்கும் மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். இரண்டும் நல்ல கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆனாலும் சில மாதங்களாக, எனக்கு அடிக்கடி சிறுநீர்த்தொற்று ஏற்படுகிறது. சிறுநீர்க்கடுப்புத் தொல்லை தருகிறது. தாம்பத்தியத்திலும் ஈடுபாடு குறைகிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? நான் என்ன செய்ய வேண்டும்?

- மா. சுந்தரமூர்த்தி, சேலம்.

உங்களுக்கு அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுவதற்கும், தாம்பத்தியத்தில் ஈடுபாடு குறைவதற்கும் நீரிழிவுதான் முக்கியக் காரணமாக இருக்கும். ஆனால், நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்துள்ளீர்கள். இருந்தாலும், மீண்டும் ஒருமுறை ரத்தச்சர்க்கரை அளவுகளை வெறும் வயிற்றிலும், உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரத்துக்குப் பின்பும், மூன்று மாத சராசரி ரத்தச்சர்க்கரை அளவையும் (ஹெச்பிஏ1சி) பார்த்துக்கொள்ளுங்கள். இவை எல்லாமே சரியாக இருக்கிறது என்றால், நீங்கள் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது அடுத்த காரணமாக இருக்க சாத்தியமுள்ளது.

கோடைக்காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொன்னால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுக்கள் அதிகமாகச் சேர்ந்துப் படிகமாகி சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும்; நீர்க்கடுப்பு உண்டாகும்.

கோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் சீக்கிரத்தில் நீர் இழப்பு ஏற்பட்டுவிடும். போதுமான அளவுக்குத் திரவம் நம் உடலில் இல்லையென்றால், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கும். அப்போது சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். குளிர் காய்ச்சல் வரும். நீண்ட நேரம் சிறுநீரை அடக்கிவைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும். இவற்றையெல்லாம் சரி செய்யுங்கள். அப்படியும் உங்கள் பிரச்சினை தீரவில்லை என்றால், உங்களுக்குச் சிறுநீரகப் பாதையில் கல் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.

சிறுநீர்ப் பாதையில் கல்

சிறுநீரகத்தில் தொடங்கி சிறுநீர்ப் புறவழிவரை சிறுநீர் செல்லும் பாதையில் கல் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்று இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளலாம். கல் நகரும்போதும், சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும் வயிற்றில் வலி உண்டாகும்.

முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையாக வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சில நேரம் அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப் பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி தொடங்கி, சிறுநீர் வெளியேறுகிற புறவழித் துவாரம்வரை பரவும். இந்த அறிகுறிகள் ஏதாவது உங்களுக்கு உள்ளதா என்பதைக் கவனியுங்கள்.

புராஸ்டேட் வீக்கம்

நீர்க்கடுப்பு ஏற்பட புராஸ்டேட் வீக்கமும் ஒரு முக்கியக் காரணம்தான். வழக்கத்தில் நடுத்தர வயதைக் கடந்தவர்களுக்கே இந்தப் பிரச்சினையால் நீர்க்கடுப்பு வருகிறது. அப்படி இருந்தால், சிறுநீர் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகப் போகும். மிதமான வேகத்தில் போகும். ஒருமுறை சிறுநீர் கழிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். எத்தனை முறை போனாலும் சிறுநீர் முழுவதுமாக போய்விட்ட திருப்தி இருக்காது. இன்னமும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும்.

சிறுநீர்ப் புறவழியில் அழற்சி இருந்தாலும், சிறுநீர்த் தாரை சுருங்கிவிட்டாலும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. அப்போது சிறுநீர் சொட்டுச் சொட்டாகப் போகும். சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாகவோ கறுப்பாகவோ மாறும். சில மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்வதும் நீர்க்கடுப்பை ஏற்படுத்தும்.

என்ன செய்ய வேண்டும்?

சிறுநீர்க் கடுப்புக்குச் சிறுநீரைப் பரிசோதித்தாலே காரணம் தெரிந்துவிடும். அத்துடன் வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அல்லது சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் நோயை முழுவதுமாகத் தெரிந்துகொள்ள முடியும். இதைக் கொண்டு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதையும் முடிவு செய்துவிடலாம். உங்களுக்கான அடிப்படைக் காரணத்தைக் களையும்போது தாம்பத்தியப் பிரச்சினைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். நீங்கள் சிறுநீரக நல மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்கள் பிரச்சினை முடிவுக்கு வரும்.

சிறுநீர்ச் சுரப்பி: ஒரு விளக்கம்

வாசகரான டாக்டர் கே. ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்னுடைய கேள்வி பதில் பகுதி சார்ந்து ‘புராஸ்டேட் சுரப்பி’க்குத் தமிழாக்கம், ‘விந்துச் சுரப்பி’ என்று கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சொல் சரியானது அல்ல. ‘புராஸ்டேட் சுரப்பி’ விந்துவைச் சுரப்பதில்லை. இது நிறமற்ற ஓர் அமிலச் சுரப்பைச் சுரக்கிறது. இந்தச் சுரப்புநீர் இங்கு வந்து சேரும் விந்துநீரின் அடர்த்தியை அதிகமாக்குகிறது; விந்தணுக்களுக்குத் தேவையான சில சத்துக்களைத் தருகிறது. அவ்வளவுதான்.

புராஸ்டேட் சுரப்பிக்குத் தமிழாக்கம் ‘முன்சூழ் சுரப்பி’ என்கிறது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அருங்கலைச்சொல் அகரமுதலி. ‘ஆண்மைச் சுரப்பி’ என்கிறது, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள கலைச்சொல்லகராதி. ஆனால், ‘சிறுநீர்ப்பை அடிச்சுரப்பி’ என்பதே சரியான தமிழ்ச் சொல். இது சிறுநீர்ப்பைக்கு அடிப்புறத்தில் இருப்பதால் இப்படி அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

(இந்தச் சுரப்பி பெண்களுக்கு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்) என்றாலும், ‘முன்சூழ் சுரப்பி’, ‘ஆண்மைச் சுரப்பி’, ‘சிறுநீர்ப்பை அடிச்சுரப்பி’ என்றெல்லாம் சொல்வதைவிட ‘புராஸ்டேட் சுரப்பி’ என்று சொன்னால், வாசகர்களுக்கு எளிதில் புரியும் எனும் வகையில் என்னுடைய பதிலில் ‘புராஸ்டேட் சுரப்பி’ என்றே குறிப்பிட்டிருந்தேன். அதேநேரம் நான் கொடுக்காத ‘சிறுநீர்ச் சுரப்பி’ என்று தலைப்பு தவறாகப் பிரசுரமாகிவிட்டது.

மேலும், விந்து சுரக்குமிடம் விரைகள் (Testes). இவற்றின் பெயர்தான் ‘விந்துச் சுரப்பிகள்’. தாம்பத்தியத்தின்போது விந்தணு சேமிப்புக்குழலில் உள்ள விந்துநீரானது (Semen), விந்தணுப்பைகள் (Seminal vesicles), புராஸ்டேட் சுரப்பி, ‘கௌபர் சுரப்பி’ (Cowper’s gland) ஆகியவை வழியாக சிறுநீர்த்தாரை (Urethra)க்கு வந்து, ‘சிறுநீர்ப்புற வழி’ (Urethral meatus) வழியாக வெளியேறுகிறது. இந்தப் பயணத்தின்போது மேற்சொன்ன சுரப்பிநீர்களுடன் விந்துநீர் கலந்து அடர்த்தியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x