Last Updated : 02 Apr, 2014 02:49 PM

 

Published : 02 Apr 2014 02:49 PM
Last Updated : 02 Apr 2014 02:49 PM

வாழ்க்கை அனுபவம்: தாகூருக்கு வந்த வயிற்று வலி!

ரவீந்திரநாத் தாகூர், ‘கீதாஞ்சலி’ படைத்து நோபல் பரிசு பெற்ற உலக மகா கவி. இவர் தன் பெற்றோருக்கு 14-வது குழந்தையாகப் பிறந்தார். தாகூருக்கு வீட்டில் கண்டிப்பு அதிகம். ‘வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது’ என்கிற வார்த்தைகள் அம்மா சாரதாதேவியிடம் இருந்து வந்துகொண்டே இருக்கும்.

வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த தாகூருக்கு நிறைய அமைதி கிடைத்தது. ஏதாவது ஒன்றைப் பற்றி எதையாவது நினைத்து கற்பனைசெய்து பார்ப்பார். பாடம் எழுதுவதற்கான நோட்டுப் புத்தகத்தில் பாட்டுகளை எழுதிவந்தார் தாகூர். அதைப் பார்த்த தலைமை ஆசிரியர் ஒரு தலைப்பைக் கொடுத்து, பாட்டு எழுதிவரும்படி சொன்னார். மறுநாளே கவிதை தயாரானது. ஆசிரியர் பாராட்டினார்.

தாகூரின் கவிதையை பத்திரிகையில் வெளியிட்டு, பள்ளிக்கும் பெருமை தேடிக்கொள்ள நினைத்தார் ஆசிரியர். ‘அப்பட்டோ’ பத்திரிகையில் கவிஞரின் முதல் கவிதை அச்சில் வந்தது. ‘அபிலாஷை’ என்ற தலைப்பில் வந்த அந்தக் கவிதையின்கீழ் ‘பன்னிரண்டு வயதே ஆன சிறுவன் எழுதிய கவிதை’ என்று குறிப்பிட்டுப் பாராட்டியது பத்திரிகை.

ஒரு கட்டத்தில் தாகூருக்கு வீட்டில் இருந்தபடியே கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாடம் படிப்பதில் அவருக்கு வெறுப்பு வந்துவிட்டது. வீட்டுக்கு வரும் ஆசிரியரை விரட்டியடிக்க என்ன செய்யலாம் என்று நண்பர்களுடன் ஆலோசனை செய்தார்.

“சளி பிடித்துவிட்டது என்று சொல்’’ என்றான் ஒருவன். “மூக்கு ஒழுகலையேன்னு பார்த்து கண்டுபிடிச்சுருவாங்க’’ என்றான் இன்னொருவன். “காய்ச்சல்னு சொல்லிடு’’ என்ற ஆலோசனைக்கும் எதிர்ப்பு வந்தது. “நெத்தியில கையவச்சுப் பார்த்து பொய் சொல்றேன்னு தெரிஞ்சுக்குவாங்க’’ என்றான் ஒரு அனுபவசாலி.

ஆலோசனைக்கு சன்மானமாக வீட்டிலிருந்து எடுத்துவந்த பலகாரங்கள் அனைத்தும் காலியாகிவிட்டன. வீட்டுக்குப் போய் படாதபாடுபட்டு மீண்டும் பலகாரங்களை எடுத்துவந்தார் தாகூர். அப்போது ஒரு நண்பனைக் காணவில்லை. கேட்டபோது, “அவனுக்கு வயிற்று வலி. வீட்டுக்குப் போய்விட்டான்” என்றார்கள். “அடடே இது தெரியாம போச்சே” என்று ஆனந்தப்பட்டார் தாகூர். வயிற்று வலி என்று சொன்னால்தான் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

மறுநாள் வயிற்றைப் பிடித்தபடி தரையில் உருண்டு புரண்டார் தாகூர். “நாளைக்கு வருகிறேன்” என்று போய்விட்டார் ஆசிரியர்.

மகிழ்ச்சியால் துள்ளிகுதித்த தாகூர், மறுநாளே “வயிற்றுவலி போய்விட்டது” என்று சொல்ல வேண்டிய நிலைமை வந்துவிட்டது. வயிற்று வலி குணமாக அம்மா கொடுத்த கசப்பு மருந்தே அதற்குக் காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x