Last Updated : 22 Apr, 2018 10:22 AM

 

Published : 22 Apr 2018 10:22 AM
Last Updated : 22 Apr 2018 10:22 AM

பெண் எழுத்து: மனதில் விரியும் மாய உலகம்

யன் ரேண்டின் படைப்பின் உச்சம் என ‘அட்லஸ் ஷ்ரக்டு’ நாவலைச் சொல்லலாம். அதை எழுதி முடிக்க 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். அந்தக் காலம் அவரது வாழ்வின் தவக் காலம். நாவலின் தலைப்பைப் போல அது வெளிவந்த காலகட்டத்தில் உலகின் அடித்தளத்தைச் சற்று அசைத்தது என்றே சொல்லலாம்.

இன்றும் அந்த எழுத்து அதை வாசிப்பவரின் ஆழ்மனதோடு மேற்கொள்ளும் ரகசிய உரையாடல்களின் மூலம் ஒரு மாய உலகுக்கு இட்டுச் செல்கிறது. அது, சமூகம் தன் இருப்புக்காக மனிதரில் பொதிந்து வைத்துள்ள அனைத்துவிதக் கோட்பாடுகளையும் நியாய-தர்மங்களையும் கேள்விக்குள்ளாக்கி அதன் மாயக் கட்டுகளைத் தளர்ந்துபோகவும் செய்கிறது.

மர்ம மனிதனின் உலகம்

மனதின் வசீகரத்தையும் அறிவின் சாத்தியங்களையும் அதன் எல்லைகளின் விஸ்தரிப்பையும் அதன் சிந்தனை வீச்சின் வேகத்தையும் அதன் கிரகிக்கும் ஆற்றலையும் தன் எழுத்து மூலம் இந்தப் புத்தகத்துக்குள் அவர் அடக்கியது பெரும் மலைப்பை ஏற்படுத்துகிறது. இதன் கதை மனிதர்களின் இருப்பைப் பற்றியது அல்ல, அவர்களின் மனதைப் பற்றியது.

ஒன்றிணைந்த அமெரிக்காவின் கடுமையான சட்டதிட்டங்களும் பொதுமக்களின் போராட்டமும் அங்கிருக்கும் தனியார் தொழில் நிறுவனங்களின் குரல்வளையை நசுக்குகின்றன. தங்களது அறிவும் உழைப்பும் உரிமையும் அறிவற்ற பெரும்பான்மையான மக்களாலும் அந்த மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசாங்கத்தாலும் திருடப்படுவதாகத் தொழிலதிபர்களும் விஞ்ஞானிகளும் கருதுகிறார்கள்.

அப்போது ஜான் கல்ட் எனும் மர்ம மனிதர் உலகில் அறிவு நிறுத்தப் போராட்டத்தை ரகசியமாக முன்னின்று நடத்துகிறார். அந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் அனைவரையும் ஒரு விசித்திரமான இயந்திரத்தின் உதவியோடு மாயமாக மறையச் செய்கிறார்.

‘யார் அந்த ஜான் கால்ட்?’ என்ற கேள்வி உலகம் முழுவதும் எதிரொலிக்க ஆரம்பிக்கும். இறுதியில் அறிவற்றவர்களால் மட்டும் நிறைந்த உலகம் ஸ்தம்பித்து நிற்கும். ஜான் கால்ட், வானத்துக்கு மேல் ஒரு புது உலகை உருவாக்கித் தன்னுடன் இருக்கும் விஞ்ஞானிகளுடனும் அறிவாளிகளுடனும் தன் சித்தாந்தங்களின் அடிப்படையில் வாழ்வதாகக் கதை முடியும்.

ஆழ்மன ஏக்கம்

அயன் ரேண்டைப் பொறுத்தவரை அறிவில் சிறந்தவனே உயர்ந்தவன். விஞ்ஞானிகள், போற்றுதலுக்கு உரியவர்கள். அவர்களை ஒடுக்கி அவர்கள் இயங்கும் பரப்பைச் சுருக்குவது கயமையின் உச்சம்.

அவர் மனிதனை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார். முதல் வகையினர், அறிவின் அடிப்படையில் வாழ்பவர்கள். இரண்டாம் வகையினர், உணர்ச்சிகளின் அடிப்படையில் வாழ்பவர்கள். அவர்கள் உணர்ச்சிகளின் உந்துதலால் தங்களது இயலாமையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சோம்பேறிகள்.

ஆனால், சமூகமும் அது உருவாக்கிய அரசாங்கமும் திறமையானவர்களின் உழைப்பைத் திருடும் உரிமையைச் சோம்பேறிகளுக்கு வழங்கியுள்ளது என்பது அயன் ரேண்டின் சித்தாந்தம். உலகின் மீதான அவருடைய ஆழ் மன கோபம் என்று சொல்வது சரியாக இருக்கும்.

ஒருவேளை ரஷ்ய புரட்சியின்போது, அயன் ரேண்டின் தந்தை தொழிலதிபராக இல்லாமல் இருந்திருந்தால், அவரது சிறு வயது வாழ்க்கை ரஷ்ய புரட்சியால் சிக்கலுக்கு உள்ளாகாமல் இருந்திருந்தால் சமூகத்தின் மீது இந்த அளவு வெறுப்போடு அவர் எழுதியிருப்பாரா எனத் தெரியவில்லை.

இந்தப் புத்தகம் வெளிவந்தபோது, ‘வெறுப்பின் உமிழ்வு’ என்றும் ‘ஆழமற்ற அறிவின் புரிதலற்ற பிதற்றல்’ என்றும் ‘நாவல் உலகுக்கு ஏற்பட்ட களங்கம்’ என்றும் விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் இந்தப் புத்தகம் இதுவரை தொண்ணூறு லட்சம் பிரதி விற்பனை ஆகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x