Published : 02 Apr 2018 10:49 AM
Last Updated : 02 Apr 2018 10:49 AM

திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் பிஎம்டபிள்யூ

சொ

குசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜெர்மனியைச் சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது திறன் மேம்பாட்டு நடவடிக்கையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள மஹிந்திரா வேர்ல்டு சிட்டியில் அமைந்துள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆலை தனது 11-வது ஆண்டை வித்தியாசமான முறையில் கொண்டாடியது. வழக்கமான ஆண்டுவிழாவாக இல்லாமல் சமுதாயத்தில் திறன்மிக்க தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கும் முயற்சியை தொடங்கியது. இந்த வித்தியாசமான அணுகுமுறையை தொடங்கி வைத்த பெருமை நிறுவனத்தின் விளம்பர தூதரும் மாஸ்டர் பிளாஸ்டருமான சச்சின் டெண்டுல்கரை சாரும்.

அடுத்த தலைமுறையை திறன் மிக்கவர்களாக உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இத்திட்டத்துக்கு `ஸ்கில்நெக்ஸ்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. பொறியியல் பயிலும் மாணவர்கள் தொழில்நுட்பத்தை நேரடியாக அறிந்துகொள்ள வசதியாக 365 இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் யூனிட்களை பிஎம்டபிள்யூ அளிக்க உள்ளது.

ஆலையில் நடைபெற்ற விழாவில் அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் சச்சின் டெண்டுல்கரும் இணைந்து காரில் இன்ஜினை பொறுத்தினார். அவர் பொறுத்திய இன்ஜின் கொண்ட கார் இந்நிறுவனத்தின் புதிய வரவாக எக்ஸ் 3 மாடல் காராக வெளிவர உள்ளது.

மாணவர்களுடன் உரையாடிய டெண்டுல்கர், தொழில்நுட்பம் குறித்து புத்தகத்தில் படித்து அறிவதானது, கிரிக்கெட் விளையாடாமல் புத்தகத்தில் மட்டுமே படிப்பதைப் போன்றது. என்ஜினைப் பார்த்து அறிந்து அது இயங்கும் விதத்தை உணரும்போதுதான் மாணவர்கள் படிப்பின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும் என்றார்.

முதலில் வரும் கல்லூரிக்கு முதலில் இன்ஜினை வழங்கப் போவதாக நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பாவா தெரிவித்தார். இது முற்றிலும் இலவசம் என்றாலும், கல்லூரிகளில் உள்ள ஆய்வகத்தில் மட்டுமே இதை சோதிக்க வேண்டும் என்று நிறுவனம் வலியுறுத்தும் என்றார்.

சென்னையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் பெருமளவிலான கார்கள் சேதமடைந்தன. அவ்விதம் பாதிக்கப்பட்ட கார்களின் என்ஜின்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் யூனிட்கள் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தரச் சான்றின்படி மறுபடியும் பயன்படுத்தக்கூடிய வகையில் இல்லை. இந்த வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்ததால், வேறு புதிய என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் யூனிட்கள் பொறுத்தப்பட்டன.

வெறுமனே பழைய இரும்புக்கு போடுவதற்குப் பதிலாக அவற்றை மாணவர்கள் கற்றுக் கொள்ள பயன்படுத்தலாம் என காப்பீட்டு நிறுவனமான பாரதி ஏஎக்ஸ்ஏ பொதுக் காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது. அதை பிஎம்டபிள்யூ நிறுவனமும் ஏற்று அதை மாணவர்களின் திறன் மேம்பாட்டு நடவடிக்கைக்கு பயன்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x