Published : 21 Apr 2018 10:20 AM
Last Updated : 21 Apr 2018 10:20 AM

படிப்போம் பகிர்வோம்: புத்தக வடிவில் குடும்ப மருத்துவர்!

நோ

ய் குறித்த விழிப்புணர்வு, நோய் குறித்த உண்மை நிலவரம், நோய் வரும்முன் காக்கும் வழி – இந்த மூன்று புள்ளிகளையும் இணைக்கும் டாக்டர் கு. கணேசன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ‘செகண்ட் ஒப்பினியன்’ புத்தகம்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிராகத் தினம் தினம் நடந்து கொண்டிருக்கும் கொடுமைகள், தண்ணீருக்கான தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் என எந்த விஷயத்தையும் ஒரு செய்தியாகக் கடந்துசென்றுவிடுபவர்கூட, தனக்கு வரும் ஒற்றைத் தலைவலிக்கு வீட்டையே இரண்டுபடுத்திவிடுவார். நரம்பு சம்பந்தமான பிரச்சினையாக இருக்குமா, ‘பிரைன் ட்யூமராக’ இருக்குமா என்றெல்லாம் பல சோதனைகளில் இறங்கிவிடுவார்.

இப்படிப்பட்டவர்களுக்கு நேர் எதிரானவர்களும் இருக்கிறார்கள். நாற்பது, ஐம்பது வயதுவரை சாதாரண கண் பரிசோதனையைக் கூடச் செய்துகொள்ளாமல் இருப்பார்கள். தொடக்கத்தில் எளிமையான சிகிச்சையில் சரியாகிவிடும் கண் பிரச்சினையைக் கவனிக்காமல், கண் பார்வையையே போக்கிக்கொள்ளும் அளவுக்குச் சென்றுவிடுவார்கள்.

புத்தக மருத்துவர்

மேற்சொன்ன இரண்டு நிலையில் இருப்பவர்களுக்கு இடைப்பட்ட சிலர் இருக்கிறார்கள். இவர்கள் தொடர்ச்சியாகத் தங்களின் குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெறுபவர்கள். ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் குடும்ப மருத்துவர், அந்தக் குடும்பத்தினருக்கு இருக்கும் பிரச்சினைகளைத் தெளிவாக உணர்ந்து, அதற்கேற்ற சிறப்பு மருத்துவர்களை அணுகுவதற்கு வழி ஏற்படுத்தித் தருவார்.

இந்த அணுகுமுறையால், குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெறும் நோயாளிக்கு நோய் குறித்த தெளிவான புரிதலும், அதற்கான சிகிச்சை முறைகளும், சிகிச்சை அளிக்கும் நிபுணர் குறித்த விவரங்களும் தெரியவரும். குடும்ப மருத்துவர் என்னும் முறையே தேய்ந்துவிட்ட இன்றைய சூழலில், நோயாளிகளின் தடுமாற்றத்தைப் போக்குவதற்கு இந்த ‘செகண்ட் ஒப்பினியன்’ நூல் பெரிதும் உதவும். ஆம், இதை புத்தக வடிவில் உள்ள குடும்ப மருத்துவர் என்று சொல்லலாம்.

நோய்களைப் புரிந்துகொள்ள

இன்றைக்குப் பெரிதும் ஆபத்தான நோயாகக் கருதப்படும் இதய நோய் குறித்த பல தகவல்களும் அதற்கான சிகிச்சை முறைகளையும் பற்றி இந்நூலின் பல கட்டுரைகளில் விரிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. உயர் ரத்தஅழுத்தத்தை எளிதாக எப்படிச் சமாளிக்கலாம், கணையத்தைக் காப்பதன் மூலம் முழு உடல் ஆரோக்கியத்தையும் எப்படிப் பெறலாம், நெஞ்சுவலி வருவதற்கு நிமோனியாவும் எப்படிக் காரணமாகிறது, அலட்சியமாகக் கருதப்படும் சிறுநீர்த் தொற்று சிறுநீரகத்தை எப்படிப் பாதிக்கும் என்பது போன்ற கட்டுரைகளைப் படித்தால் நிச்சயம் நோய் குறித்த சரியான புரிதலும், சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பதன்மூலம் நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளும் தைரியமும் வரும். புற்று நோய், நீரிழிவு நோய், ஹெர்னியா, மூல நோய் உள்ளிட்ட பல நோய்களின் தன்மைகளை விளக்கும் 42 கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

தனக்குத் தெரிந்ததை எல்லாம் எழுதிவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இடையில், வாசகருக்கு எது தேவையோ அதை எழுதுபவர் டாக்டர் கு. கணேசன். மருத்துவத் துறையோடு எழுத்துத் துறையிலும் தனக்கிருக்கும் நெடிய அனுபவத்தால் ஒவ்வொரு கட்டுரையையும் படிப்பவருக்கு மிகவும் நெருக்கமாகக் கொண்டு சேர்த்து, இந்த நூலிலும் தமது நோக்கத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். வாசிப்பு அனுபவத்தில் இந்த ‘செகண்ட் ஒபினியன்’ நோயைக் குறித்த ‘ஃபர்ஸ்ட் ஒபினியனை’ தெளிவாக அளித்துவிடுகிறது என்பது நூலின் சிறப்பு.

செகண்ட் ஒப்பினியன்

டாக்டர் கு. கணேசன்

சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை – 600 004. தொடர்புக்கு: 044-42209191

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x