Published : 10 Feb 2018 11:51 AM
Last Updated : 10 Feb 2018 11:51 AM

சர்வதேச வலிப்பு விழிப்புணர்வு நாள்: வலிப்பு நோய்.. தெரிந்ததும் தெரியாததும்

ந்தியாவில் 60 லட்சம் பேருக்கு வலிப்பு நோய் இருக்கிறது; உலகில் ஆயிரம் பேரில் 4 முதல் 10 பேர்வரை வலிப்பு பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள் என மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

யாருக்கு வரலாம்?

வலிப்பு நோயல்ல; நோயின் அறிகுறி. சிலருக்கு மூளையில் உள்ள திசுக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவதால் வலிப்பு ஏற்படலாம். இன்னும் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்படும்போது வலிப்பு ஏற்படலாம். மூளையில் ஏற்படக்கூடிய கட்டிகள், மூளைத் திசுக்களைத் தாக்கும் கிருமிகள், மூளைக் காயங்கள், மூளைத் திசுக்கள் சிதைவதால் ஏற்படும் பாதிப்புகள், மூளை ரத்தக்குழாய் பாதிப்பு போன்றவற்றால் வலிப்பு ஏற்படலாம். மதுப் பழக்கம் மூலம் ஏற்படும் தலைக்காயங்கள், மூளையில் ஏற்படும் ரத்தக்குழாய் மாற்றங்களாலும் வலிப்பு ஏற்படலாம்.

குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுமா?

பிறவியிலேயே மூளையில் பிரச்சினை உள்ளவர்கள், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளும்கூட வலிப்பு நோய்க்கு ஆளாகலாம். பிறந்ததிலிருந்து 2 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்குக் கிருமித்தொற்று மூளையைத் தாக்கும் ஆபத்து உண்டு. இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வரும். குழந்தையின் ரத்தத்தில் சர்க்கரை, கால்சியம், மக்னீசியம், ‘பிரீடாக்சின்’ போன்ற சத்துக்குறைவு காரணமாகவும் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு வலிப்பு நோயில் முடியலாம்.

சில குழந்தைகளுக்குக் காய்ச்சல் வரும்போது வலிப்பு நோய் வருவதைப் பார்த்திருப்பீர்கள். பெரும்பாலும் ஆறு மாதம் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாக வலிப்பு ஏற்படுகிறது. இதை ‘பெப்ரைல் பிட்ஸ்’ என்று சொல்லுவார்கள். 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமான காய்ச்சல் குழந்தைகளைத் தாக்கும்போது வலிப்பு ஏற்படலாம். காய்ச்சல் காரணமாக வரும் வலிப்பு சில நிமிடங்களில் மட்டுப்பட்டுவிடும்.

வலிப்பு பரம்பரை நோயா?

வலிப்பு நோய் பரம்பரையாக வரக்கூடும் என சமீப கால மருத்துவ ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வலிப்பு உள்ளவர்களின் நெருங்கிய உறவினர்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது வலிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள், ஆறு மடங்கு அதிகம் காணப்பட்டன. எனவே குடும்பத்தில் ஒருவருக்கு வலிப்பு நோய் இருந்தாலும், வீட்டில் உள்ள மற்றவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிகிச்சைகள் என்னென்ன?

நவீன மருத்துவ வளர்ச்சியின் விளைவாக, வலிப்பைக் குறைக்கவும் தடுக்கவும் வலிப்பு நீக்கி மருந்துகள் நிறைய வந்துவிட்டன. மருந்துகளுடன் கூடிய முறையான மருத்துவ சிகிச்சையும் வலிப்பு நோயாளிக்குப் பயன் தரும். முறையாக சிகிச்சை பெற்றால், 60 முதல் 80 சதவீதம் பேருக்கு வலிப்பு வருவது முழுவதும் தடுக்கப்படக்கூடியதுது. எனவே, முறையான சிகிச்சை முறையைப் பின்பற்றுவது முக்கியம்.

வலிப்பு நோயாளிக்கு எப்போதும் மனதில் ஓர் அச்சம் காணப்படும். அது, வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமோ என்பதுதான். வலிப்பு நோயாளிகள் அச்சப்படத் தேவையில்லை. மருந்து சாப்பிட தொடங்கியதிலிருந்து 3 ஆண்டுவரை வலிப்பு வரவில்லை என்றால் மாத்திரைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, ஒரு கட்டத்தில் முழுமையாக நிறுத்திவிடலாம். ஆனால், உடனடியாக மாத்திரைகளை நிறுத்துவதோ நேரம் தவறி உட்கொள்வதோ கூடவே கூடாது.

எதில் கவனம் தேவை?

வலிப்பு வந்தவர்கள் சிறு விபத்துக்கு உள்ளாவதைக்கூடக் கண்டிப்பாகத் தடுக்க வேண்டும். உயரமான இடங்களில் வேலை பார்ப்பது, இயந்திரங்களில் பணிபுரிவது, தண்ணீருக்கு அடியில் இயங்கக்கூடிய பணிகளில் ஈடுபடுவது, வாகனம் ஓட்டுவது போன்ற பணிகள் செய்வதை வலிப்பு நோயாளிகள் தவிர்க்க வேண்டும். வலிப்பு நோய் பாதிப்புள்ள குழந்தைகளைக் குளம், குட்டை, கிணறு ஆகிய இடங்களுக்கு அருகே விளையாட அனுமதிக்க வேண்டாம்.

dr aleem அலீம் rightதடுப்பது எப்படி?

குழந்தைகளுக்கு வலிப்பு உண்டாவதை நிச்சயம் தடுக்கலாம். கர்ப்பத்துக்கு முன்னும் பின்னும் சரியான பராமரிப்பு முறை, தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு பிரசவம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்கு வலிப்பு உண்டாவதைத் தடுக்கலாம். போதுமான ஊட்டச்சத்து, தக்க நேரத்தில் தடுப்பூசி போடுவது, தலைக்காயங்களைத் தவிர்ப்பது போன்றவை அவசியம்.

வலிப்பு பற்றி பல்வேறு மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. அவற்றை நம்பிக்கொண்டிருப்பது பிரச்சினையைத் தீவிரமாக்கிவிடும். மருத்துவ சிகிச்சை மூலம் இதைக் குணப்படுத்த முடியும். உலக அளவில் இந்த நோயின் தாக்கத்தை உணர்த்தவும் விழிப்புணர்வை அதிகரிக்கவும் பிப்ரவரி 12-ம் தேதி சர்வதேச வலிப்பு விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

கட்டுரையாளர், தமிழ்நாடு, புதுச்சேரி மூளை நரம்பியல் கழகத் தலைவர்
தொடர்புக்கு: drmaaleem@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x