Last Updated : 28 Feb, 2018 11:27 AM

 

Published : 28 Feb 2018 11:27 AM
Last Updated : 28 Feb 2018 11:27 AM

உடல் எனும் இயந்திரம் 12: நோய் காட்டும் கண்ணாடி!

நாக்கு என்பது நம் வாய்த்தளத்தில் அமைந்துள்ள தசையாலான உறுப்பு. இதயம், கல்லீரல் போன்று உடலில் எலும்புகள் இல்லாத மற்றோர் உறுப்பு இது. விலங்கினங்களில் விதிவிலக்காக, பறவைகளின் நாக்கில் மட்டும் சிறு எலும்பு இருக்கிறது.

இது ‘குரல்வளை மூடி’ (Epiglottis)யில் ஆரம்பித்து வாயின் முனையில் முடிகிறது. இது நுனி நாக்கு, உடல் நாக்கு, பின் நாக்கு என மூன்று பகுதிகளைக் கொண்டது. நாக்கின் உடல் பகுதி இணையச் சவ்வுடனும் (Frenulum), வேர் போலிருக்கும் பின் பகுதி ஹயாட் எலும்பிலும் (Hyoid bone) இணைந்துள்ளன. இணைய சவ்வானது நாக்கை வாய்த்தளத்தில் இணைக்கிறது. நுனி நாக்கு மட்டும் எதிலும் ஒட்டாமல் இயங்குகிறது. இதன் மூன்றில் ஒரு பகுதி மேல் அண்ணத்தை நோக்கியும், மீதிப் பகுதி தொண்டையைப் பார்த்தும் இருக்கிறது.

நாக்கின் நீளம் ஆணுக்குச் சராசரியாக 8.5 செ.மீ.; பெண்ணுக்கு 8 செ.மீ. உலகிலேயே அதிக நீளமுள்ள நாக்கைப் பெற்றிருப்பவர், அமெரிக்காவைச் சேர்ந்த நிக் ஸ்டோபெர்ல் (Nick Stoeberl). இவருடைய நாக்கின் நீளம் 10.1 செ.மீ. இது ஒரு கின்னஸ் சாதனை.

ஓர் ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். எப்போதும் ஈரமாக இருக்கும். பார்ப்பதற்கு ஒரே தசையால் உருவானதுபோல் தெரிந்தாலும், அமைப்பு ரீதியில் இது எட்டு தசைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தசைகள் நான்கு உள் இயக்கத் தசைகள் (Intrinsic muscles), நான்கு வெளி இயக்கத் தசைகள் (Extrinsic muscles) என இரு பிரிவுகளாக உள்ளன. உள் இயக்கத் தசைகள் எலும்போடு இணையாதவை. வெளி இயக்கத் தசைகள் எலும்போடு இணைந்துள்ளவை.

shutterstock_8563645 [Converted]_col

நாக்கின் வடிவம் நம் உச்சரிப்பைப் பொறுத்து மாறும் தன்மையுடையது. குதிரைக்கும் நாய்க்கும் இதன் வடிவம் U போலிருக்கிறது. எருது, பன்றி, செம்மறி ஆடு ஆகியவற்றின் நாக்கு V வடிவத்தில் இருக்கிறது.

நாக்கு நமக்குச் செய்யும் முக்கியமான பணி, பலதரப்பட்ட சுவைகளை உணர்த்துவது. அதோடு பற்களின் துணையுடன் திட உணவை மெல்வது, விழுங்குவது, திரவ உணவை அருந்துவது, வாயில் உள்ளதைத் துப்புவது ஆகிய உணவு இயக்கங்களுக்கும் இது உதவுகிறது. பேசுவதற்கும் பாடுவதற்கும் நாக்கு மிகவும் அவசியம். விலங்கினங்களில் கிளியின் நாக்கு மட்டும் மனிதர்களைப்போல் குரல் எழுப்பும் தன்மை கொண்டது. அதனால்தான் ‘கிளி பேசுகிறது’ என்கிறோம். மேலும், நாக்கு பற்களைச் சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

பல்வேறு விலங்குகள் தங்கள் நாக்கைச் சுவையை அறிவதற்கும், உணவை உறிஞ்சிக்கொள்ளவும் மட்டுமல்லாமல், வேறு பல பணிகளுக்கும் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, நாய், பூனைகளின் நாக்கு உடலைத் தேய்த்துச் சுத்தம் செய்துகொள்ள உதவுகிறது. பாம்புகளின் நாக்கு வாசனையைச் சேகரித்து, உணர்வுறுப்புகளுக்கு அனுப்பி, இரை இருக்கும் இடத்தைத் தெரிந்துகொள்கிறது. தவளை, பச்சோந்தி, அலங்கு, எறும்புத்தின்னி போன்றவை தங்கள் நீண்ட நாக்கைப் பயன்படுத்தி இரையைப் பிடிக்கின்றன. ரீங்காரச் சிட்டுகள் (Humming birds) தாவரங்களிலிருந்து தேனை உறிஞ்சுவதற்குத் தங்கள் நாக்கைப் பயன்படுத்துகின்றன.

நாக்கின் மேற்புறம் மியூக்கஸ் எனும் சளிப்படலத்தால் மூடப்பட்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான அரும்புகள் (Papillae) வேர்போல் புதைந்துள்ளன. இவற்றில் 3,000 முதல் 10,000 வரை சுவை அரும்புகள் (Taste buds) குடியுள்ளன. இவை பல நரம்புப் பின்னல்கள் வாயிலாக மூளையுடன் இணைந்துள்ளன. இதன் பலனால், இவை உணவில் உள்ள இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு எனும் நான்கு முக்கியச் சுவைகளை நமக்கு உணர்த்துகின்றன.

‘யுமாமி’ (Umami) எனும் பெயரிலும் ஒரு சுவை உணர்வை ஜப்பானியர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். குறிப்பாகச் சொன்னால், சோயா சாஸில் இருப்பது போன்ற மிகுந்த புளிப்புச் சுவை கொண்ட ஒரு வகை சுவை உணர்வு இது. ‘மோனோசோடியம் குளுட்டமேட்’ (Monosodium glutamate) எனும் வேதிப்பொருளில் இந்தச் சுவை உள்ளது.

இனிப்புச் சுவை நுனி நாக்கிலும், கசப்புச் சுவை நாக்கின் பின்புறத்திலும், உப்புச் சுவையும் புளிப்புச் சுவையும் நாக்கின் இரண்டு பக்கவாட்டிலும் மிகுதியாக உணரப்படுகின்றன என்றுதான் காலங்காலமாக பள்ளிப் பாடங்களில் கற்றுத்தரப்படுகிறது.

ஆனால், ‘உணவில் உள்ள எல்லா சுவைகளையும் நாக்கின் எல்லாப் பகுதிகளும் நமக்கு உணர்த்தக் கூடியவைதான்’ என்று 1974-ல் அமெரிக்க ஆராய்ச்சியாளர் வெர்ஜினியா கோலிங்க்ஸ் (Virginia Collings) நிரூபித்துள்ளார். மேலும், சுவை அரும்புகள் நாக்கின் மேற்புறம் மட்டுமல்லாமல், வாயின் மேற்புறமுள்ள மென் அண்ணத்திலும், உள் கன்னத்திலும், நாக்கின் அடியிலும், உதட்டிலும் இருக்கின்றன என்று இவர் உறுதிசெய்துள்ளார்.

shutterstock_1019127655 [Converted]_colright

ஆரோக்கியமாக உள்ள ஓர் உடலில் களைப்பே அறியாத உறுப்பு என்றால், அது நாக்கு மட்டுமே!

நாக்கை ‘ஒரு நோய் காட்டும் கண்ணாடி’ என்றும் கூறலாம். இதன் மேற்பரப்பில் காணப்படும் நிறம், மாவு போன்ற படிவங்களை வைத்து ரத்தசோகை போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடு, டைபாய்டு, பூஞ்சைத் தொற்று, மஞ்சள் காமாலை போன்ற பலதரப்பட்ட தொற்றுநோய்கள், புற்றுநோயையும் கணிக்க முடியும்.

மனித விரல் ரேகைகளைப் போலவே ஒருவரின் நாக்கின் நுண்பகுதிகள் (Tongue prints) தனித்தன்மையைப் பெற்றுள்ளவை. இதனால், ஒருவருக்கு இருக்கின்ற நாக்கைப்போல அடுத்தவர்களுக்கு இருக்காது. இந்தத் தன்மையைப் பயன்படுத்தி, மனிதர்களை அடையாளம் காண முடியும்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x