Published : 11 Dec 2017 11:58 AM
Last Updated : 11 Dec 2017 11:58 AM

ஹோண்டா `கோல்டுவிங்’

ப்பானிய நிறுவனமான ஹோண்டா இந்தியாவில் தற்போது பிரீமியம் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. கோல்டு விங் என்ற பெயரிலான இந்த மோட்டார் சைக்கிள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதன் விற்பனையக விலை ரூ. 26.85 லட்ச மாகும்.

உயர்திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் 1,833 சிசி திறன் கொண்டதாகும். வழக்கமான மோட்டார் சைக்கிளில் ஒரு சிலிண்டரில் 2 வால்வுகள் இருக்கும். இதில் ஒரு சிலிண்டரில் நான்கு வால்வுகள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் 125 பிஹெச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம் வேகமெடுக்கும். இதன் உச்சபட்ச வேகம் 170 நியூட்டன் மீட்டராகும். இது 4,500 ஆர்பிஎம் சக்தியை வெளிப்படுத்தும்.

பொதுவாக கார்களில் மட்டுமே இருக்கும் பயணத் தேர்வு வசதி (டிரைவிங் மோட்) முதல் முறையாக மோட்டார் சைக்கிளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் டூர், ஸ்போர்ட், இகான், மழை உள்ளிட்ட நான்கு வித ஓட்டுவதற்கான தேர்வு நிலைகள் உள்ளன. பின் சக்கரத்தின் பிடிமானத்தை உறுதி செய்யும் விதமாக இந்த தேர்வு நிலைகள் அமையும். இரட்டை கிளட்ச், 7 கியர்களை கொண்டதாக இது வெளிவருகிறது. பார்க்கிங் செய்வதற்கு வசதியாக ரிவர்ஸ் மற்றும் நடந்து செல்லும்போது தள்ளிச் செல்வதைப் போன்ற வசதிகள் இதில் உள்ளன.

இதில் 7 அங்குல டிஎப்டி திரை உள்ளது. இதன் மூலம் சஸ்பென்ஷனின் செயல்பாட்டை நிர்ணயித்துக் கொள்ளலாம். ஐபோனுடன் இணைக்கலாம். ஆப்பிள் கார் பிளேவும் இதில் உள்ளது.

இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற கண்காட்சியில் கோல்டுவிங் காட்சிப்படுத்தப்பட்டது. 1974-ம் ஆண்டு ஹோண்டாவின் முதல் கோல்டுவிங் ஜிஎல் 1000 மோட்டார் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டது. நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்காக இது அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாடலில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முதலில் பதிவு செய்வோருக்கு முதலில் டெலிவரி அளிக்கப்படும் என்ற அடிப்படையில் முன்பதிவு செய்யப்படுவதாக ஹோண்டா அறிவித்துள்ளது.

புத்தாண்டில் ஹோண்டா கோல்டுவிங் சாலைகளில் சீறிப் பாயும் என எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x