Published : 02 May 2017 10:04 AM
Last Updated : 02 May 2017 10:04 AM

குரூப் 2 தேர்வு: மொழிப் பாடம் எவ்வளவு முக்கியம்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2 ஏ, 4, 7 பி, 8 பணியிடங்களுக்கான தேர்வுகளில் மாணவர்களின் மொழித் திறனைச் சோதிக்கும் வகையில் 100 கேள்விகள் கேட்கப்படுகின்றன. பொது அறிவு, முடிவெடுக்கும் திறன் உள்ளிட்டவைக்கு இணையான முக்கியத்துவத்தை மொழி பாடத்துக்குத் தந்தால் மட்டுமே இதில் வெற்றி பெற முடியும். மாணவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலப் பாடங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். தமிழ்வழிப் படித்தவர்கள் தமிழைத் தேர்வு செய்துகொள்வது நல்லது.

முழு மதிப்பெண் பெற

பாடத்திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு தரத்தில் மொழித்தாள் கேள்விகள் அமைந்திருக்கும். இந்தத் தாளுக்கு மாணவர்கள் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மொழி பாடநூல்களைப் படிக்க வேண்டும். இலக்கணம், இலக்கிய வரலாறு பற்றி புதிய நூல்களைத் தேடிப் படிக்க வேண்டிய அவசியமில்லை. ஐந்தே பாட நூல்கள். தேர்வின் சரிபாதி கேள்விகளுக்குச் சுமார் ஆயிரம் பக்கங்களைப் படித்தே விடையளித்துவிட முடியும்.

மொழித் தாளை நன்கு படித்துவிட்டால் கைவசம் 100 கேள்விகளுக்கு விடையிருக்கும். பொது அறிவுத் தாளுக்கு ஒதுக்குகிற நேரத்தில் ஐந்தில் ஒரு பங்கு நேரத்தை ஒதுக்கினால் போதும், மொழித் தாளில் முழு மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம். ஒவ்வொரு மதிப்பெண்ணும் வெற்றியைத் தீர்மானிக்கிறது. எனவே மொழித் தாள் பாடத்தில் இயன்றவரை அதிக மதிப்பெண்களைப் பெறுவது வெற்றியைச் சுலபமாக்கும்.

கேள்விமுறை மாறிவிட்டது

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, குரு 2 தேர்வுகளுக்கான மொழித் தாள் வினாக்கள் மிகவும் நேரடியாகவும் எளிமையாகவும் கேட்கப்பட்டன. ஆனால் தற்போது கேள்வி முறையில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் வந்துள்ளன. எதிர்மறைக் கேள்விகள், தொடர்புள்ள நான்கு கருத்துகளில் எது எது சரியானது என்று யூ.பி.எஸ்.சி. முதனிலைத் தேர்வு பாணியில் கேள்விகளைப் பார்க்க முடிகிறது. இப்படிக் கேள்விகள் கேட்கப்படுவதன் நோக்கம் மொழித் தாளை எழுதும் மாணவர், பாடங்களை நன்றாக உள்வாங்கிக் கொண்டாரா என்பதைச் சோதிக்கத்தான்.

வார்த்தைக்கு வார்த்தை

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளின் மொழித் தாளுக்கு உதவும் வகையில் தேர்வு வழிகாட்டி நூல்கள் நிறைய வெளியாகியுள்ளன. ஆனால் அவற்றின் துணைகொண்டு தற்போது தேர்வில் முழு மதிப்பெண்களைப் பெற வாய்ப்பில்லை. காரணம், பாடத்தை நேரடியாகப் புரிந்துகொள்ளாமல் எதிர்மறைக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது சிரமமானது. எனவே பாடநூல்களை வாங்கி அல்லது தமிழ் நாடு பாடநூல் நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து தரவிறக்கி முழுமையாகப் படிப்பதே தேர்வை எதிர்கொள்வதற்கு சிறந்த வழி.

மொழிப் பாடங்களைப் பொறுத்தவரை இதெல்லாம்கூடவா கேள்வியாகக் கேட்பார்கள் என்று யோசிக்கவே கூடாது. அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கேற்கும் தேர்வு என்பதால், கேள்விகள் பெரும்பாலும் வடிகட்டும் நோக்கத்திலேயே வடிவமைக்கப்படுகின்றன. எனவே எந்த ஒரு வார்த்தையையும் அலட்சியம் செய்யக்கூடாது.

மேல்நிலைப் பாடத்தையும் படியுங்கள்

கடந்த ஆண்டு நடந்த சில குரூப் 2 நிலை தேர்வுகளில் பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மொழிப்பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஏறக்குறைய எட்டுக் கேள்விகள் என்பதாக அதன் விகிதம் அமைந்திருந்தது. ஒரு தேர்வில் ஐந்தாம் வகுப்பு மொழிப்பாடத்திலிருந்தும்கூடக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. எனவே நேரம் வாய்த்தால், மேனிலைப் பள்ளி மொழிப்பாடங்களையும் படித்துக்கொள்வது நல்லது.

தமிழா, ஆங்கிலமா?

குரூப் 2 தேர்வுகளில் தேர்வுக்கான மொழிப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாகத் தேவை. ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகப் படிக்கும் சில மாணவர்கள், தமிழ் கடினமாக இருக்குமோ என்று அஞ்சி, ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், ஆங்கிலத்தைப் படித்துப் புரிந்துகொள்வதற்கும், ஆங்கில இலக்கண அறிவுக்கும் வேறுபாடு இருக்கிறது. இந்தக் குழப்பத்தின் விளைவால் சில சமயங்களில் மதிப்பெண்கள் குறையவும் நேரலாம். அதனால் மொழிப்பாடத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பு கடந்த ஆண்டு கேள்வித்தாள்களை ஒருமுறை படித்துவிட்டு, அதன் பிறகு முடிவெடுப்பது நன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x