Published : 09 May 2017 11:07 AM
Last Updated : 09 May 2017 11:07 AM

பாடம் ஒன்றே போதுமே!

நடந்து முடிந்திருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் பாடத்திட்டத்திற்கும் அடுத்து நடக்கவிருக்கும் முதுகலை ஆசிரியர் தேர்வின் பாடத்திட்டத்திற்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

முதன்மைப் பாடம்

ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் குழந்தை வளர்ச்சி, கல்வி உளவியல், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் என்று பல பாடங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும். ஆனால் முதுகலை ஆசிரியர் தேர்வைப் பொறுத்தவரை, முதன்மைப் பாடத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காரணம், மொத்தமுள்ள 150 கேள்விகளில் 110 கேள்விகள் முதன்மைப் பாடத்திலிருந்தே கேட்கப்படும். 30 கேள்விகள் கல்வி முறையியல் பிரிவிலிருந்தும், 10 கேள்விகள் பொது அறிவுப் பிரிவிலிருந்தும் கேட்கப்படும். ஒவ்வொரு பாடத்திற்குமான விரிவான பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் படிக்கவும் தரவிறக்கிக்கொள்ளவும் செய்யலாம்.

முதுகலை தரம்

முதுகலை ஆசிரியர் தேர்வைப் பொறுத்தவரை முதன்மைப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் கல்வித் தகுதி. அதைப் போலவே தேர்வில் கேட்கப்படும் கேள்விகளும் முதுகலைக்கான கல்வித் தரத்தில் அமைந்திருக்கும். இளங்கலை மற்றும் முதுநிலையில் படித்த பாட நூல்களை முழுமையாகப் படிக்க வேண்டும். ஆனால், ஐந்தாண்டுகள் படித்த பாடங்கள் முழுவதையும் மிகக் குறுகிய காலத்தில் திரும்பவும் படிக்க வாய்ப்பு இல்லை. எனவே ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பள்ளிப் பாடத்திலும் கவனம்

முதுகலைப் பட்டப் படிப்பு தரத்தில் தேர்வை எதிர்கொண்டாலும் அந்தக் குறிப்பிட்ட பாடத்தின் பள்ளிப் பாட நூல்களையும் ஒருமுறை படித்துக்கொள்வது நல்லது. குறிப்பிட்ட பாடத்தில் பள்ளிப் பாட நூல்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே முதுகலை வரையிலான பாட நூல்கள், தேர்வு வாரியத்தின் பாடத்திட்டம், பள்ளிப் பாட நூல்கள் என அனைத்திற்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கல்வி முறையியல்

கல்வி முறையியல் பாடத் திட்டத்திலிருந்து 30 கேள்விகள் கேட்கப்படுகின்றன. முதன்மைப் பாடத்தில் அதிக மதிப்பெண்களைப் பெற இயலாதபோது கல்வி முறையியலில் அதிக மதிப்பெண்களைப் பெற்று ஈடுசெய்ய முடியும். எனவே கல்வி முறையியல் பிரிவில் கேள்விகளைத் தவிர்க்கக் கூடாது.

பொது அறிவு

இந்திய வரலாறு, தமிழக வரலாறு, அரசியலமைப்பு, ஆளுமைகள், விளையாட்டு, அடிப்படை அறிவியல், நடப்புச் சம்பவங்கள் ஆகிய பிரிவுகள் அனைத்திலிருந்தும் மொத்தமாகப் பத்துக் கேள்விகள் கேட்கப்படும். மிக விரிவான இந்தப் பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை குறைவு. எனவே, இந்தப் பிரிவுக்கு நேரம் ஒதுக்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.

மொத்தக் கேள்விகளில் மூன்றில் இரண்டு பங்கு முதன்மைப் பாடத்திலிருந்தே கேட்கப்படுகின்றன. எனவே, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் முதுகலை ஆசிரியர் தேர்வைப் பொறுத்தவரையில் முதன்மைப் பாடத்திற்கே அதிக கவனம் கொடுத்துப் படிக்க வேண்டும்.

முதுகலைப் பட்டப் படிப்பு தரத்தில் தேர்வை எதிர் கொண்டாலும் அந்தக் குறிப்பிட்ட பாடத்தின் பள்ளிப் பாட நூல்களையும் ஒருமுறை படித்துக்கொள்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x