Last Updated : 28 May, 2019 12:02 PM

 

Published : 28 May 2019 12:02 PM
Last Updated : 28 May 2019 12:02 PM

மக்களவைத் தேர்தல் 2019: பாஜகவின் சாதனைகளும் தமிழ்நாட்டின் தனித்தன்மையும்

நாட்டின் 17-வது மக்களவைத் தேர்தல் 2019 ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 23 அன்று வெளியாயின. பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருக்கிறது. இதன்மூலம் 2014-ல் பிரதமரான நரேந்திர மோடி இரண்டாவது முறையாக அந்தப் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.

35 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த சாதனை

# இந்தத் தேர்தலில் தமிழகத்தின் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 542 தொகுதிகளில் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் 350 தொகுதிகளில் வென்றுள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 90 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 102 தொகுதிகளிலும் வென்றுள்ளன. தனிப்பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க. மட்டும் 303 தொகுதிகளில் வென்றுள்ளது. 2014 தேர்தலில் பா.ஜ.க. 282 தொகுதிகளில் வென்ற அக்கட்சி இந்த முறை அதைவிட 21 தொகுதிகளை அதிகமாக வென்றிருக்கிறது.

# ஒரு கட்சி அடுத்தடுத்து இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதும், மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சி 300 அல்லது அதற்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வதும் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்திருக்கின்றன. இதற்குமுன் 1980 தேர்தலில் 353 தொகுதிகளையும் 1984 தேர்தலில் 404 தொகுதிகளையும் வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்திருந்தது.

1984-ல் காங்கிரஸ் நிகழ்த்திய 404 தொகுதிகளில் வெற்றி என்ற சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. இடையில் 2004, 2009 அடுத்தடுத்த தேர்தல்களில் வென்று ஆட்சி அமைத்திருந்தாலும் இரண்டு முறையும் அக்கட்சி தனிப்பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை.

எதிர்க்கட்சி இல்லா மக்களவை

# மொத்தமுள்ள தொகுதிகளில் 10% தொகுதிகளை வென்றால் மட்டுமே மக்களவையில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். அதற்கு ஒரு கட்சி 55 தொகுதிகளிலாவது வென்றிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கிறது.

2014 தேர்தலில் அக்கட்சி 44 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. இந்த முறை வேறெந்த கட்சியும் 55 அல்லது அதற்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லவில்லை. எனவே, தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிகாரபூர்வ எதிர்க்கட்சி இல்லாத மக்களவை அமையவிருக்கிறது.

# அதேநேரம், காங்கிரஸ் கட்சி கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 15-லும், பஞ்சாப்பின் 13 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளிலும், தமிழகத்தில் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8-லும் வென்றுள்ளது.

முழு ஏற்பும் நிராகரிப்பும்

# ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளம், மேகாலயம் ஆகியவற்றில் பா.ஜ.க. ஒரு மக்களவைத் தொகுதியில்கூட வெல்லவில்லை. குஜராத் (26), ஹரியாணா (10), டெல்லி (7), உத்தராகண்ட் (5), இமாசல பிரதேசம் (4), அருணாசல பிரதேசம் (2), திரிபுரா (2) ஆகிய மாநிலங்களில் அனைத்துத் தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.

தனித்து நின்ற தமிழ்நாடு

# தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37-யை திமுக தலைமையிலான ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ வென்றுள்ளது. திமுக 23 தொகுதிகளில் வென்று மக்களவையின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

இந்தக் கூட்டணியில் மார்க்சிய கம்யூனிஸ்ட் (2), இந்திய கம்யூனிஸ்ட் (2), விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (சொந்தச் சின்னத்தில் நின்று வென்ற கட்சிகள்) இடம்பெற்றிருந்தன.

2014 தேர்தலில் 37 தொகுதிகளில் வென்றிருந்த அ.தி.மு.க. இதே அந்தஸ்தை முன்பு பெற்றிருந்தது. இந்த முறை அக்கட்சி தேனி தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் வென்றிருந்த பாஜக இம்முறை அதையும் இழந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x