Last Updated : 05 Feb, 2019 11:20 AM

 

Published : 05 Feb 2019 11:20 AM
Last Updated : 05 Feb 2019 11:20 AM

சேதி தெரியுமா? - ஜார்ஜ் பெர்ணான்டஸ் மறைவு

ஜனவரி 29: மத்திய முன்னாள் அமைச்சரும் 9 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான ஜார்ஜ் பெர்ணான்டஸ் டெல்லியில் மறைந்தார். அவருக்கு வயது 88. கர்நாடகத்தின் மங்களூருவில் 1930-ம் ஆண்டு பிறந்தார்.  சோஷலிஸ்ட்டாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பாஜகவில் இணைந்து வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

ஜாக்டோ-ஜியோ போராட்டம் முடிவு

ஜனவரி 30: ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி  ஒன்பது நாட்களாக (ஜனவரி 22 முதல்) நடைபெற்று வந்த தமிழக அரசின் ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப்  பெறப்பட்டது. மாணவர்களின் நலன், உயர் நீதிமன்றம், தமிழக முதல்வரின் கோரிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு தங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்தது. தமிழக அரசு தங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும் இந்த அமைப்புத் தெரிவித்தது.

வேலைவாய்ப்பின்மை: 6.1 % அதிகரிப்பு?

ஜனவரி 30: நாட்டின் வேலைவாய்ப்பின்மை 45 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு 2017-18-ம் ஆண்டில். 6.1 சதவீதம் அதிகரித்திருத்திருப்பதாக தேசிய மாதிரி ஆய்வக அலுவலகத்தின் (NSSO) அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிக்கையை வெளியிடவிடாமல் மத்திய அரசு தடுத்துவைத்திருந்ததாகக் குற்றம்சாட்டிய தேசியப் புள்ளியியல் ஆணையத்தின் உறுப்பினர்கள் இரண்டு பேர் ஜனவரி 28 அன்று ராஜினாமா செய்தனர். ஆனால், நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார், தற்போது வெளியாகிவிருப்பது வரைவு அறிக்கைதான் என்றும், வேலைவாய்ப்பின்மை தொடர்பான முழு அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். 

s2jpg

இடைத்தேர்தல் முடிவுகள்

ஜனவரி 31: ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்கர் சட்டமன்றத் தொகுதிக்கும், ஹரியாணா மாநிலத்தின் ஜிந்த் சட்டமன்ற தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தல் (ஜனவரி 28) முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ராம்கர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷஃபியா ஸுபைர், ஜிந்த் தொகுதியில் பாஜக வேட்பாளர் கிருஷண் மித்தாவும் வெற்றிபெற்றனர். 

இடைக்கால பட்ஜெட்-2019

பிப்ரவரி 1: 2019-ம் ஆண்டுக்கான இடைக் கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத் துக்குள் இருப்பவர்களுக்கு வரிவிலக்கு, 2 ஹெக்டருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரூ.6000 ஆண்டு நிதித் திட்டம், வீட்டு வாடகை வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 1.8 லட்சத்திலிருந்து 2.4 லட்சமாக உயர்வு உள்ளிட்ட அம்சங்கள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x