Published : 13 Feb 2018 11:29 AM
Last Updated : 13 Feb 2018 11:29 AM
ம
த்திய அரசின் பொதுத்துறை வங்கியான ஐ.டி.பி.ஐ. வங்கி (இந்தியத் தொழில்வளர்ச்சி வங்கி) நிர்வாகி (Executive) பதவியில் 760 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப உள்ளது. இப்பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதி ஆண்டு பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 55 சதவீத மதிப்பெண் போதும். 20-லிருந்து 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகைஅளிக்கப்படும். மேலும், அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களிலும் அவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு உண்டு.
தேர்வும் பயிற்சியும்
தகுதியுடைய பட்டதாரிகள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். இதில், ரீசனிங், பயன்பாட்டு ஆங்கிலம், அடிப்படை கணிதத் திறன் ஆகியவற்றில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் 150 வினாக்கள் கேட்கப்படும். தேர்வு நேரம் ஒன்றரை மணி நேரம். நிர்வாகி பணிக்குத் தேர்வுசெய்யப்படுவோர் 3 ஆண்டுகள் பணியாற்றிய பின்பே உதவி மேலாளர் (கிரேடு-ஏ) பதவியில் பணியமர்த்தப்படுவர்.
பணியின்போது முதலாமாண்டு மாதம் ரூ.17 ஆயிரம், இரண்டாமாண்டில் ரூ.18,500, மூன்றாமாண்டில் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். நிர்வாகி பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள் ஐ.டி.பி.ஐ. வங்கியின் இணையதளத்தை (www.idbi.com) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினர்களை எழுத்துத் தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில் வங்கியின் சார்பில் சிறப்பு பயிற்சி அந்தந்தத் தேர்வு மையங்களில் நடைபெறும்.
இந்தச் சிறப்பு பயிற்சியைப் பெற விரும்புவோர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இதுகுறித்து குறிப்பிட வேண்டும். கூடுதல் விவரங்களை வங்கியின் இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT