

லண்டன்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க வீரர் ஹெய்ன்ரிச் கிளாசெனை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மீண்டும் போட்டிகளில் விளையாட வைக்க முயற்சிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க வீரரான ஹென்ரிச் கிளாசன் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றபோதிலும் கிளாசென் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஹெய்ன்ரிச் கிளாசென் ஹைதராபாத் அணிக்காக அதிரடி ஆட்டம் மூலம் அதிக ரன்களைக் குவித்துள்ளார். இந்த சீசனில் இதுவரை அவர் 414 ரன்கள் விளாசியுள்ளார்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், ஹெய்ன்ரிச் கிளாசெனை அவரது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாட வைக்க முயற்சிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இதுவரை தென் ஆப்பிரிக்க அணி உலகக் கோப்பையை வென்றது கிடையாது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஹெய்ன்ரிச் கிளாசெனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அவரை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாட வேண்டும் என்று வாரியம் வலியுறுத்த வேண்டும். அப்படி செய்தால், முதல் முறையாக உலகக் கோப்பையை வெல்ல முயற்சி செய்யும் தென் ஆப்பிரிக்க அணிக்கு அது மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.