பாக். வீரர் அப்ரார் அகமதை ஏலத்தில் ஒப்பந்தம் செய்தது சன்ரைசர்ஸ் அணி | The Hundred 2026
சென்னை: எதிர்வரும் தி ஹன்ட்ரட் 2026 சீசனை முன்னிட்டு நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதை ஒப்பந்தம் செய்துள்ளது சன்ரைசர்ஸ் அணி.
சுழற்பந்து வீச்சாளரான அவரை 1.90 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலத்தில் வாங்கியது சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி. இந்த சீசனில் பங்கேற்று விளையாடும் 8 அணிகளில் 4 அணிகளை ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அந்த வகையில் இந்த அணிகள் ஏலத்தில் பங்கேற்றனர். அதில்தான் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அப்ரார் அகமதை ஒப்பந்தம் செய்தது.
27 வயதான அப்ரார் அகமது, கடந்த 2024-ல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருந்தார். இதுவரை 38 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 52 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். முன்னதாக, மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகளின் உரிமையாளர்களாக இந்தியர்கள் உள்ளனர். அதனால் இந்த நான்கு அணிகளும் தி ஹன்ட்ரட் சீசனுக்கான ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை ஒப்பந்தம் செய்யாது என தகவல் வெளியானது.
இந்த சூழலில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் தி ஹன்ட்ரட் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் தேசத்தின் அடிப்படையில் வீரர்கள் புறக்கணிக்கப்பட கூடாது என தெரிவித்தனர். இந்த சூழலில்தான் சன்ரைசர்ஸ் அணி, அப்ரார் அகமதை ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2008 சீசனுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களின் பங்கேற்பு தடை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
