

ஸ்பெயின் வீரர் லமின் யமால்
லாஸ் ஏஞ்சல்ஸ்: லமின் யமாலின் சிறந்த ஆட்டம் இனிதான் வர உள்ளதாக ஸ்பெயின் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபியூண்டே தெரிவித்துள்ளார்.
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் நேருக்கு நேர் விளையாட உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இதில் வெல்லும் அணி அரையிறுதியில் பிரான்ஸ் உடன் விளையாடும்.
இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை ஒரு கோலை கூட ஸ்பெயின் அணி விட்டுக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் டிபென்ஸ் மற்றும் நடுகள வீரர்கள் எதிரணிக்கு சவால் கொடுப்பார்கள். பந்தை ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிப்பார்கள். அதில் அவர்களுக்கு வெற்றியும் கிட்டியுள்ளது.
இந்த் சூழலில் ஸ்பெயின் அணியின் முன்கள வீரர் லமின் யமால் குறித்து பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபியூண்டே பேசியுள்ளார். ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திர வீரராக அவர் அறியப்படுகிறார். மற்ற அணிகளின் நட்சத்திர வீரர்கள் கோல் மழை பொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
“இந்த தொடரில் முதிர்ச்சியான ஆட்டத்தை லமின் யமால் வெளிப்படுத்தி வருகிறார். ரவுண்ட் ஆப் 16 சுற்றில் பலம் வாய்ந்த அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். சிறந்த ஆட்டம் இனிதான் வர உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். அவரது ஆட்டத்தின் அபார தருணத்தை முழுமையாக எட்டினால் அது அபாரமானதாக இருக்கும்.
அவர் அட்டாகிங் ஆட்டத்தில் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்துவார். அதற்காக காத்திருப்போம். அதற்கான தகுதி அவரிடம் உள்ளது” என்று லூயிஸ் டி லா ஃபியூண்டே தெரிவித்துள்ளார்.