

ஹூப்ளி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கர்நாடகா - ஜம்மு & காஷ்மீர் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜம்மு & காஷ்மீர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்து. தொடக்க வீரரான கும்ரான் இக்பால் 6 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷுபம் பண்டிர், யாவர் ஹாசனுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.
139 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை பிரசித் கிருஷ்ணா பிரித்தார். யாவர் ஹாசன் 150 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் முதல் சிலிப் திசையில் நின்ற கே.எல்.ராகுலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பராஸ் டோக்ரா 9 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களம்புகுந்த அப்துல் சமத் அதிரடியாக விளையாடினார்.
மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஷுபம் பண்டிர் 186 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். மட்டையை சுழற்றிய அப்துல் சமத் 64 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார்.
முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஜம்மு & காஷ்மீர் அணி 87 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது. ஷுபம் பண்டிர் 221 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 117 ரன்களும், அப்துல் சமத் 67 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது ஜம்மு & காஷ்மீர் அணி.