

தமிழக அரசியலில் 2026 தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கட்சி என்றால், அது தவெக தான். விஜய்யின் ‘கூட்டணி’ கனவுகள் தவிடு பொடியான நிலையில், எத்தகையை வியூகத்துடன் அவர் தேர்தலை எதிர்கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
‘அவர் வருகிறார், கூடவே இவரும் வருகிறார்’ என ’அதீத நம்பிக்கையில்’ கூட்டணிக் கட்சிகளுக்காக காத்துக் கிடந்த தவெகவை, ஒரு கட்சி கூட இதுவரை சீண்டவில்லை. திரைப்படங்களில் வரும் ‘அமெரிக்க மாப்பிள்ளை’ போல தவெகவை பயன்படுத்தி ஒவ்வொரு கட்சியும் தனக்கான பேர வலிமையை அதிகப்படுத்தி, பிரதான கட்சிகளிடம் அதிக சீட்டுகளைப் பெற்று வருகின்றன. இனி ‘ஊட்டிக்கு தனியாகத்தான் போகணும் போல’ என்ற மனநிலையில் இப்போது விரக்தியில் உறைந்திருக்கிறார் விஜய்.
அரசியல் என்றால் ‘சர்க்கார்’ படம் போல நொடிகளில் எல்லாவற்றையும் மாற்றிவிடலாம் என்ற கனவோடு இருந்தது விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, விஜய்யும் தான். 2024-ல் ஒரு மாநாடு, 2025-ல் ஒரு மாநாடு, சில மக்கள் சந்திப்புகள், 2026 மே மாதத்தில் தமிழக முதல்வர் என்பதெல்லாம் சினிமாவில் வேண்டுமானால் சாத்தியமாகும். ஆனால், நிஜத்தில் அரசியல் என்பது புலிகள் உறுமும் காடு, சுனாமிகள் கொக்கரிக்கும் கடல் என்பது இப்போது தவெகவினருக்கு புரிந்திருக்கும். அதன் வெளிப்பாடாகவே சமீபத்தில் வேலூர் மேடையில் கலங்கி, புலம்பித் தவித்தபடி பேசினார் விஜய்.
2026 தேர்தல் என்பது திமுக, அதிமுக மட்டுமல்ல, விஜய்யின் தவெகவுக்கும் முக்கியமான தேர்தல்தான். இந்த தேர்தலை எதிர்கொள்ள ஆரம்பத்தில் மிக உற்சாகத்தோடு இருந்தார் விஜய். ‘கூட்டணி ஆட்சி’ என்ற தூண்டிலை வீசினால் விசிக, தேமுதிக, அமமுக, பாமக, கம்யூனிஸ்டுகள் எல்லாம் தன் பக்கம் வருவார்கள். இவர்களை வைத்து ‘ஓவர் நைட்’டில் ஆட்சியை பிடித்து முதல்வராகிவிடலாம் என கணக்குப் போட்டார் விஜய். ஆனால், இந்தக் கட்சிகள் எல்லாம் ‘விஜய்’ ஆப்ஷனை வைத்து மிரட்டி திமுக, அதிமுக கூட்டணியில் தங்களுக்கு தேவையானதை சாதித்துக் கொண்டார்கள்.
கரூர் சம்பவம் கழுத்தை நெரித்த நிலையில், காங்கிரஸின் கையை பிடிக்கவும் தூது விட்டு பார்த்தார் விஜய். தமிழகத்தில் எங்கள் பக்கம் நில்லுங்கள், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் உங்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம் என்று கூட காங்கிரஸிடம் டீல் பேசிப் பார்த்தார்கள். ஆனால், கடைசியில் காங்கிரஸும் விஜய்க்கு கல்தா கொடுத்துவிட்டது. இப்போது விஜய்க்கு வேறு வழியே கிடையாது, தனித்து நிற்க வேண்டியதுதான்.
அரசியலில் ஒவ்வொரு கட்சியிலும் வென்ற பின்னர்தான் கோஷ்டிகள் உருவாகும். ஆனால், தவெகவில் இப்போதே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன் என தலைமை கோஷ்டிகள் மட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டத்திலும் குட்டிக் குட்டி கோஷ்டிகளும் காரசாரமாக மோதி வருகின்றன. விஜய்யை சந்திக்க வேண்டுமானால், இப்போதே மேற்சொன்ன உப தெய்வங்களை தரிசித்த பின்னர்தான் செல்ல முடியும். இதனையெல்லாம் ‘மோப்பம்’ பிடித்ததால் தான் விஜய்யோடு கூட்டணிக்குச் செல்லும் முடிவை அரசியல் கட்சிகள் தூக்கி தூரம்ப் போட்டதாக சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அதீத நம்பிக்கையில் இருக்கிறாரா விஜய்?
எப்போதும் புதிதாக கட்சி தொடங்குபவர்கள் ஆளும் கட்சியை விமர்சிப்பது வழக்கமானதே. அதே பாணியில்தான் விஜய்யும் திமுகவை விமர்சிக்கிறார். ஆனால், விஜய் கட்சியை தொடங்கியபோது, அரசியல் எதிரி என திமுகவையும், கொள்கை எதிரி என பாஜகவையும் காட்டமாக விமர்சித்தார். அரசியல் எதிரி என்பது தேர்தல்களுக்கானது. ஆனால், கொள்கை எதிரி என்பது ஒவ்வொரு கட்சியின் உயிர்நாடி. அதன்படி பார்த்தால், பிரச்சாரம் தொடங்கியது முதல் இப்போதுவரை அரசியல் எதிரியான திமுகவை விமர்சிப்பதை விஜய் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறார். ஆனால், ஆரம்பத்தில் இருந்து கொள்கை எதிரியான பாஜகவை தொட்டும் தொடாமலும் விமர்சித்து வந்த விஜய், ‘கரூர் சம்பவத்துக்கு’ பின்னர் பாஜகவை மறந்தும் கூட விமர்சிப்பதில்லை.
செல்லுமிடமெல்லாம் கூட்டம் கூடுகிறது என்ற ஒரே அளவுகோல் மட்டுமே தேர்தல் வெற்றியை பெற்றுத் தராது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டான சம்பவம் இப்போது நடந்துள்ளது. தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் கொடுக்கிறார்கள் என்றவுடன், நேரிலும், ஆன்லைனிலும் சுமார் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தவெகவினரால் வாங்கப்பட்டன. ஆனால், திரும்ப வந்தது என்னவோ வெறும் 5 ஆயிரம் தான்.
கட்சியை தொடங்கியவுடன் கூட்டணி கட்சிகளுக்கு ‘சிக்னல்’ கொடுத்தார், அது நடக்கவில்லை. அடுத்ததாக, வாரா வாரம் ‘மக்கள் சந்திப்பு’க்கு திட்டம் போட்டார், அது ஓரிரு வாரங்களில் கரூரோடு முடிவுக்கு வந்தது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு இதுவரை விஜய் செல்லவில்லை என்பதும் அக்கட்சியினரின் உற்சாக குறைவுக்கு காரணமாக உள்ளது.
சமூக வலைதளங்களில் ‘லைக்கும், ஷேரும்’ எகிறுகிறது, சாலையில் சென்றால் கூட்டம் திணறுகிறது. இது மட்டும் தேர்தல் வெற்றிக்குப் போதும் என உறுதியாக உள்ளது தவெக. இது நம்பிக்கையா அல்லது அதீத நம்பிக்கையா என்பதை தேர்தல் களம் விஜய்க்கு சொல்லும்.