

சிஎஸ்கே வீரர் ஜேமி ஓவர்டன்
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து காயம் காரணமாக சிஎஸ்கே வீரர் ஜேமி ஓவர்டன் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி அறிவித்துள்ளது.
32 வயதான ஆல்ரவுண்டரான அவர், சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசன் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.
நடப்பு சீசனில் 10 ஆட்டங்களில் விளையாடி 14 விக்கெட்டுகள் மற்றும் 136 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில், அவருக்கு வலது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டதாக புதன்கிழமை இரவு சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது. காயத்தின் தீவிர தன்மையை அறியவும், அடுத்தகட்ட சிகிச்சைக்காகவும் அவர், இங்கிலாந்து திரும்பியுள்ளார்.
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் தனது பங்களிப்பை அவர் வழங்கி இருந்தார். இப்போது முதல் சுற்றின் இறுதிக்கட்ட ஆட்டங்கள் நெருங்கியுள்ளது.
இந்தச் சூழலில் அணியில் அவர் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக அமையலாம் என தகவல். கலீல் அகமது, ஆயுஷ் மாத்ரே உள்ளிட்ட வீரர்கள் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து நடப்பு சீசனில் பாதியில் விலகினர்.
சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசனில் காயம் காரணமாக இன்னும் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. அவர் முழுமையான மேட்ச் ஃபிட்னஸ் எட்டவில்லை என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது ஜேமி ஓவர்டன்னும் விலகி உள்ளார்.
மாற்று வீரர்: சிஎஸ்கே அணியில் அவருக்கு மாற்றாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 25 வயது ஆல்ரவுண்டர் டியான் ஃபாரெஸ்டரை ரூ.75 லட்சத்த்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது அணி நிர்வாகம். அவர் நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடி இருந்தார்.