

திருவனந்தபுரம்: இலங்கைக்கு எதிரான 4-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோருக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கை மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் நேற்று முன்தினம் 4-வது டி20 போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது.
ஸ்மிருதி மந்தனா 80, ஷபாலி வர்மா 79, ரிச்சா கோஷ் 40, ஹர்மன்பிரீத் கவுர் 16 ரன்கள் குவித்தனர். பின்னர் 222 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் மட்டுமே குவித்தது. இதையடுத்து இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் கூறியதாவது: இலங்கை வீராங்கனைகள் அபாரமாக விளையாடினர். ஆனால், அருந்ததி ராய், வைஷ்ணவி சர்மா, ஸ்ரீசரணி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி அவர்களைக் கட்டுப்படுத்தினர். பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் அதிடியாக விளையாடினர். அவர்களது அதிரடி ஆட்டம் வெற்றிக்கு உதவியது. அவர்களுக்கு எனது பாராட்டுகள். கடைசி மற்றும் 5-வது ஆட்டத்திலும் வெற்றியைக் குவிக்க முயல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
சிறந்த ஆட்டக்காரர் விருது பெற்ற ஸ்மிருதி மந்தனா கூறும்போது, “இந்த ஆட்டத்தில் அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக கூடுதலாக பயிற்சி எடுத்தேன். இதனால் 4-வது போட்டியில் அதிக ரன்கள் குவிக்க முடிந்தது” என்றார்.
8 முறை விருது: நேற்றைய போட்டியில் ஆட்டநாயகி விருதை ஸ்மிருதி வென்றார். இதன்மூலம் டி20 போட்டிகளில் ஆட்டநாயகி விருதை 8-வது முறையாக வென்றுள்ளார் ஸ்மிருதி மந்தனா. அதிக ஆட்ட நாயகி விருதுகளை வென்ற இந்திய வீராங்கனைகள் வரிசையில் 12 விருதுகளுடன் மிதாலி ராஜ் முதலிடத்திலும், 11 விருதுகளுடன் ஹர்மன் பிரீத் கவுர் 2-வது இடத்திலும், 8 விருதுகளுடன் ஷபாலி வர்மா 3-வது இடத்திலும் உள்ளனர். ஷபாலி வர்மாவுடன் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.