

குவாடலஹாரா: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று குவாடலஹாராவில் உள்ள எஸ்டாடியா அக்ரான் மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெக்சிகோ - தென் கொரியா அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
50-வது நிமிடத்தில் தென் கொரிய அணியின் தற்காப்பு அரணின் இமாலயத் தவற்றைப் பயன்படுத்தி, மெக்ஸிகோ அணி முதல் கோலை அடித்தது. இதுவே அந்த அணியின் வெற்றி கோலாகமாகவும் அமைந்தது.
மெக்ஸிகோ வீரர் குவினோனெஸ், தென் கொரியாவின் கிம் மூன்-ஹவானை மிக லாவகமாக முந்திச் சென்று, பெனால்டி ஸ்பாட்டை நோக்கி துல்லியமான கிராஸை அடித்தார். அங்கே தயாராக நின்ற மெக்ஸிகோ நட்சத்திரம் ரவுல் ஜிமினெஸ், தென் கொரியாவின் டிஃபென்டர் கிம் மின்-ஜேவுடன் அந்தரத்தில் போராடியபடி பந்தைத் தலையால் முட்டி காற்றில் உயர்த்தினார்.
அப்போது தென் கொரிய அணியின் கோல்கீப்பர் கிம் சியுங்-கியு பந்தைப் பிடிக்கத் தனது கோட்டை விட்டு முன்னோக்கிப் பாய்ந்து வந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் பந்தைக் கையாள்வதில் தடுமாறிய கோல்கீப்பர், தனது சொந்த அணியின் டிஃபென்டர் லீ கி-ஹியுக் மீது மோதியவாறு தவறவிட்டார்.
அந்த நேரம் அங்கே தளர்வாக வந்த பந்தைக் குறிபார்த்துக் காத்திருந்த மெக்ஸிகோவின் லுயிஸ் ரோமோ காலியாக இருந்த கோல் வலைக்குள் திணித்தார். இதனால் மெக்சிகோ 1-0 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் தென் கொரியா போட்டியைச் சமன் செய்யப் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மெக்ஸிகோ கோல்கீப்பர் ரவுல் ரான்கெல் அற்புதமாக செயல்பட்டு அதை முறியடித்தார். தென் கொரியாவின் நட்சத்திர வீரர் சோ குவே-சுங் மிகக் குறுகிய தூரத்திலிருந்து இலக்கை நோக்கி தலையால் முட்டிய பந்தை மெக்சிகோ கோல்கீப்பர் ரான்கெல் மிகச் சிறப்பாகத் தடுத்தார்.
ஆனால், பந்து அவர் மீது பட்டு மீண்டு வந்து தென் கொரியாவின் யாங் ஹியூன்-ஜுன் கால்களில் விழுந்தது. அவர், உடனே பந்தை கோல் வலைக்குள் திணிக்க முயன்றார். அப்போது கோல்கீப்பர் ரான்கெல், தரையில் படுத்தவாறே தனது வலது கையை அசாத்தியமான வேகத்தில் நீட்டி பந்து கோல் கோட்டைத் தாண்டாதவாறு தடுத்து நிறுத்தினார்.
முடிவில் மெக்சிகோ 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. மெக்சிகோ அணி தனது முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருந்தது. இந்த இரு வெற்றிகளின் மூலம் மெக்சிகோ அணி 6 புள்ளிகளுடன் நடப்பு தொடரில் முதல் அணியாக 32 அணிகள் கலந்து கொள்ளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.