

மான்டேரி: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் குரூப் எஃப் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜப்பான் 4-0 என்ற கோல் கணக்கில் துனிசியாவை சாய்த்தது.
மெக்சிகோவின் மான்டேரி நகரிலுள்ள எஸ்டாடியோ மைதானத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 4- வது நிமிடத்திலேயே ஜப்பான் வீரர் டாய்ச்சி கமாடா ஒரு கோலடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். சக நாட்டு வீரர் கெய்டோ நகமுரா பாஸ் செய்த பந்தை கோல் வலையை நோக்கி அற்புதமாக அடித்தார் டாய்ச்சி கமாடா.
அவர் அடித்த பந்து துனிசியா கோல்கீப்பரை ஏமாற்றி கோல் வலையைத் துளைத்தது. இதையடுத்து ஜப்பான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ஜப்பான் மேலும் ஒரு கோலடித்தது. ஜப்பான் வீரர் கோவு இடாகுரா கிராஸ் செய்து கொடுத்த பந்தை அழகாக வாங்கி கோலடித்தார் அயாசே உவேடா. இதனால் ஜப்பான் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் நீடித்தது. முதல் பாதி வரை 2-0 என்ற நிலை நீடித்தது.
ஆட்டத்தின் 2-வது பாதியில் ஜப்பான் அணியின் 3-வது கோலை அடிக்க அயாசே உவேடா உதவினார். அயாசே உவேடா கடத்திக் கொண்டு வந்த பந்தை, ஜுன்யா இடோவை நோக்கித் தட்டி விட்டார். இதை லாவகமாக பெற்ற ஜுன்யா இடோ, துனிசியா கோல்கீப்பரை ஏமாற்றி கோலடித்தார். இதனால் ஜப்பான் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இறுதியில் அயாசே உவேடா தனது 2-வது கோலை அடிக்க ஜப்பான் 4-0 என்ற முன்னிலைக்குச் சென்றது. இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே ஜப்பான் 4-0 என்ற கணக்கில் துனிசியாவை துவம்சம் செய்தது.
இது பிஃபா உலகக் கோப்பையில் நடைபெற்ற 1000-வது போட்டியாகும். இந்த வெற்றியின் மூலம் எஃப் பிரிவில், ஜப்பான் நாக்-அவுட் முன்னேறுவதற்கான நிலையை வலுப்படுத்தியுள்ளது. மேலும், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற, ஸ்வீடனுக்கு எதிரான தங்களது கடைசி லீக் ஆட்டத்தில், ஜப்பானுக்கு ஒரு புள்ளி மட்டுமே தேவைப்படுகிறது. துனிசியா தனது 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது.