

டார்வின்: வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணி விளையாடியது.
இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 263 ரன்களும், ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் 355 ரன்களும் எடுத்தன. 92 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 22 ஓவர்களில் 54 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி இன்னிங்ஸ் மற்றும் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக தன்ஸித் ஹசன் 22 ரன்கள் சேர்த்தார். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்கை ரன்னை எட்டவில்லை. ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி தரப்பில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான கேம்பெல் தாம்சன் 11 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்களை வீழ்த்தினார். கோரி ரோக்கிச்சியோலி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 13-ம் தேதி டார்வினில் உள்ள மாராரா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.