

சென்னை: தமிழக அரசின் விளையாட்டு விடுதிகளில் சேர மே 6-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) அறிவித்துள்ளது.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக தமிழகம் முழுவதும் 28 இடங்களில் அறிவியல் பூர்வமான பயிற்சி, சத்தான உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த விளையாட்டு விடுதிகளில், 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.
விருப்பமுள்ள 6, 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் மே 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த மாணவர்களுக்கான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி, வாலிபால், கிரிக்கெட், ஹேண்ட்பால் ஆகிய மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் அந்தந்த மாவட்ட விளையாட்டரங்குகளில் நடைபெறும்.
அந்தவகையில், மாணவர்களுக்கான தேர்வுகள் மே 7-ம் தேதியும், மாணவிகளுக்கான தேர்வுகள் மே 8-ம் தேதியும் காலை 7 மணியளவில் தொடங்குகின்றன. மாநில அளவிலான தேர்வுகள் மே 12-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளன.
அதன்படி, சென்னையில் வாள்வீச்சு, ஜூடோ, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் மற்றும் நீச்சல் போட்டிகளுக்கான தேர்வுகளும், தஞ்சாவூரில் பளுதூக்குதல், திருச்சியில் வுஷூ, கடலூரில் மல்யுத்தம், கிருஷ்ணகிரியில் டேக்வாண்டோ மற்றும் விழுப்புரத்தில் மல்லர்கம்பம் ஆகிய போட்டிகளுக்கான தேர்வுகளும் நடைபெறுகின்றன. தகுதியுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.