Published : 01 Jun 2023 07:41 AM
Last Updated : 01 Jun 2023 07:41 AM

முதல் சுற்றிலேயே வீழ்ந்தார் பி.வி.சிந்து

பி.வி.சிந்து | கோப்புப்படம்

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் கிடாம்பி ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினர்.

தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 15-ம் நிலை வீராங்கனையான கனடாவின் மிட்செல்லி லியுடன் மோதினார். ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 8-21, 21-18, 18-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். மற்ற ஆட்டங்களில் சாய்னா நெவால் 21-13 21-7 என்ற நேர் செட்டில் கனடாவின் வென் யு ஸாங்கையும், அஷ்மிதா ஷாலிகா 17-21 14-21 என்ற நேர் செட்டில் மாளவிகா பன்சோத்தையும் வீழ்த்தினர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள சீனாவின் ஷி யுகியை எதிர்த்து விளையாடினார். 47 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2018ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷி யுகியை 21-18 22-20 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் 59-ம் நிலை வீரரான கிரண் ஜார்ஜ்.

அதேவேளையில் இந்தியாவின் முன்னனி வீரர்களான கிடாம்பி ஸ்ரீகாந்த் 8-21, 21-16, 14-21 என்ற செட் கணக்கில் சீனாவின் வெங் ஹாங் யங்கிடமும், சாய் பிரணீத் 14-21, 16-21 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கிறிஸ்டோ போபோவிடமும், சமீர் வர்மா 15-21, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் மேக்னஸ் ஜோஹன்னசெனிடமும் தோல்வி அடைந்தனர்.

23-ம் நிலை வீரரான இந்தியாவின் லக் ஷயா சென் தனது முதல் சுற்றில் 1 மணி நேரம் 10 நிமிடங்கள் போராடி 21-23, 21-15, 21-15 என்ற செட் கணக்கில் 27-ம் நிலை வீரரான சீன தைபேவின் வாங் சூ வெயியை தோற்கடித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x