Published : 30 May 2023 01:57 PM
Last Updated : 30 May 2023 01:57 PM

IPL Final | உலகின் சிறந்த கிரிக்கெட் மைதானத்தில் நவீன தொழில்நுட்பமின்றி அவலம்: பிசிசிஐ மீது ரசிகர்கள் சாடல்

மைதானத்தை உலரச் செய்யும் பணியில் ஊழியர்கள்

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி ரிசர்வ் டே வரை சென்றது. அப்போதும் மழை குறுக்கீடு காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் 5 ஓவர்கள் குறைக்கப்பட்டன. மைதானத்தில் இருந்த நீரை உலர்த்துவதற்கு மைதான பராமரிப்பாளர்கள் அசராமல் பணி செய்தனர்.

இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்தப் பணிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் விரட்டியது. முதல் ஓவரில் 3 பந்துகள் வீசிய நிலையில் நேற்று இரவு 09:50 மணி அளவில் மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இறுதியாக நள்ளிரவுக்குப் பின்னர்தான் (12:10 AM) ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் 15 ஓவர்கள் கொண்ட இன்னிங்ஸாக குறைக்கப்பட்டது.

மழை நேற்று (திங்கள்) இரவு 09:50 மணிக்கு தொடங்கி சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இரவு 10:13 அளவில் ஆடுகளத்தை மூடியிருந்த திரை (கவர்) நீக்கப்பட்டது. அதன் பிறகு போட்டியின் நடுவர்கள் மற்றும் இரு அணிகளின் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் ஆடுகளத்தை பார்வையிட்டனர். அப்போது பிரதான ஆடுகளத்தின் பக்கத்தில் இருந்த இரண்டு பயிற்சி ஆடுகளங்கள் மழையால் ஈரப்பதத்துடன் இருந்தது. தொடர்ந்து அதை உலரs செய்யும் பணிகளை மைதான பராமரிப்பு ஊழியர்கள் மேற்கொண்டனர். சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை இந்தப் பணி நீடித்தது.

ஸ்பாஞ்ச் (Sponge) கொண்டு நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்தது. அதோடு உலரச் செய்யும் பணிக்கு மணல் தூவப்பட்டது. மேலும் அயர்ன் பாக்ஸ், ஹேர் ட்ரையர் போன்றவையும் பயன்படுத்தப்பட்டது. இந்தக் காட்சியை கண்ட ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். அதோடு தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளத்திலும் தெரிவித்திருந்தனர். மைதான பராமரிப்பாளர்களுக்கு மழை கோட்டு கூட கொடுக்காதது குறித்து சில பதிவுகளை பார்க்க முடிந்தது.

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தையும் (பிசிசிஐ) சாடி இருந்தனர். மழையால் ஏற்படும் ஈரத்தை துரிதமாக உலரச் செய்ய நவீன தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தாதது குறித்தும் சாடி இருந்தனர்.

சிலர் ஒப்பீட்டளவில் சமூக வலைதளங்களில் சில பதிவுகளை பகிர்ந்திருந்தனர். இங்கிலாந்து போன்ற நாடுகளில் மழையின்போது ஆடுகளத்தை மூட பயன்படுத்தும் ‘கிரிக்கெட் ஹவர் கவர்’ இல்லாதது குறித்தும் பேசி இருந்தனர். சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று ‘எங்களுக்கு இரவலாக தர முடியுமா?’ என்றும் கேட்டிருந்தனர்.

இருந்தும் மைதான பராமரிப்பாளர்கள் அயராது பணி செய்து, தங்கள் கைவசம் இருந்த ஸ்பாஞ்ச், ட்ரையர் போன்றவற்றை கொண்டே மைதானத்தை செப்பனிட்டனர். அவர்களது உழைப்புக்கு ஒரு ‘சல்யூட்’. இருந்தாலும் பிசிசிஐ எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்குள் மழையின்போது ஆடுகளத்தை மூட உதவும் ‘ஹவர் கவர்’ போன்றவற்றை வாங்குவது சிறந்தது.

— (வாழப்பாடி இராம சுகந்தன்) (@vazhapadi) May 29, 2023

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x