Published : 13 May 2023 06:56 AM
Last Updated : 13 May 2023 06:56 AM

IPL 2023 | டெல்லி கேபிடல்ஸுடன் இன்று மோதல் - வெற்றி நெருக்கடியில் களமிறங்கும் பஞ்சாப்

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் 11 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் கூட 14 புள்ளிகளை மட்டுமே பெறும். இது முதல் 4 இடங்களுக்குள் செல்வதற்கு போதுமானதாக இருக்காது. ஏனெனில் இந்த சீசனில் கடும் போட்டி நிலவுவதால் குறைந்தது 16 புள்ளிகளையாவது எட்ட வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. ஒருவேளை டெல்லி அணி 14 புள்ளிகளை எட்டினால் மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையே ஏற்படக்கூடும்.

டெல்லி அணியில் இந்த சீசனில் இந்திய பேட்ஸ்மேன்களிடம் இருந்து பெரிய அளவிலான பங்களிப்பு வெளிப்படாதது பலவீனமாக உள்ளது. டேவிட் வார்னர், பில் சால்ட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் பெரிய அளவில் ரன் வேட்டை நிகழ்த்தினால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்ற சூழ்நிலை உள்ளது. ஆனால் இவர்களிடம் தொடர்ச்சியான செயல்திறன் இல்லை.

டாப் ஆர்டர் விரைவாக சரிந்தால் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்வதிலும், பெரிய அளவிலான ஷாட்களை மேற்கொள்வதிலும் திணறுவது அணியின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது. பந்து வீச்சில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். இவர்கள் பஞ்சாப் அணி பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

ஷிகர் தவண் தலைமையிலான பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி காண வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. மும்பை, கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது பஞ்சாப் அணி. இந்த இரு ஆட்டங்களிலும் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட தவறினர். கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் வெற்றியை கோட்டைவிட்டது பஞ்சாப் அணி.

பேட்டிங்கில் ஷிகர் தவண் வலுவாக உள்ளார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான பிரப்ஷிம்ரன் சிங்கிடம் இருந்து நிலையான ஆட்டம் வெளிப்படுவது இல்லை. பனுகா ராஜபக்ச காயத்தில் இருந்து மீண்டுள்ள நிலையில் கடந்த ஆட்டத்தில் 3 பந்துகளை சந்தித்து டக்-அவுட் ஆனார். அதேவேளையில் ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் அர்ஷ்தீப் சிங் பிரதான வீரராக உள்ளார். அதேவேளையில் நேதன் எலிஸ், சேம் கரண் ஆகியோர் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது பலவீனமாக உள்ளது. தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லாததது பந்து வீச்சு கலவையை பாதிப்பதாக இருக்கிறது. லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹர் அணியில் இருந்தாலும் அவரிடம் இருந்து சீரான திறன் வெளிப்படவில்லை.

ஹைதரபாத் - லக்னோ மோதல்: ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. லக்னோ அணி 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 11 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

சிஎஸ்கேவுக்கு எதிராக அந்த அணி மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டிருந்தது. ஹைதராபாத், லக்னோ ஆகிய இரு அணிகளுமே பிளே ஆஃப் சுற்றுக்குமுன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் கணிசமான வெற்றிகளை பெற வேண்டும். இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற இரு அணிகளுமே கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x