Published : 12 May 2023 05:55 PM
Last Updated : 12 May 2023 05:55 PM

அடுத்த தோனி யார்?- சஞ்சு சாம்சனா.. ஹர்திக் பாண்டியாவா?

சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா

கிரிக்கெட் மட்டுமல்ல எந்த ஒரு விளையாட்டிலும் ஒரு ஜீனியஸ் ஒருவர் ரிட்டையர் ஆகிவிட்டார் என்றால் அவரது வாரிசு யார்? இவரா, அல்லது அவரா? போன்ற விவாதங்கள் எழுவது இயல்பே. இந்திய கிரிக்கெட்டில் அவ்வாறு இப்போது பேசுபொருள் ஆகியிருப்பது தோனிக்குப் பிறகு யார் என்பதே?

இங்கிலாந்தில் அடுத்த இயன் போத்தம் யார்? என்ற விவாதம் நெடுநாள் நீண்டது. இன்று மெக்கல்லமின் ‘பாஸ்பால்’ அதிரடி அணுகுமுறை வந்தபிறகுதான் அடுத்த போத்தம் யார் என்ற எரிச்சலூட்டும் விவாதம் முடிவுக்கு வந்தது. அதே போல் சச்சின் டெண்டுல்கர், லாரா போன்ற ஜீனியஸ்களுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் இப்போது இருந்து வருகின்றது. தோனியைப் பொறுத்தவரை மூன்று விதமாக விவாதங்கள் எழுகின்றன, ஒன்று அவரது பேட்டிங் ஸ்டைல், மற்றொன்று பினிஷிங் திறமை, மூன்றாவது அவரது கேப்டன்சி.

இதில் டெஸ்ட் கேப்டன்சியில் தோனியை உலகின் கிரேட்களோடு ஒப்பிட முடியாது. வெளிநாடுகளில் ஏகப்பட்ட உதைகளை அவர் கேப்டன்சியில் இந்திய அணி வாங்கியுள்ளது. அதுவும் மிகவும் வயிற்றெரிச்சலான தருணம், தென் ஆப்பிரிக்காவில் 2013-14 தொடரில் டர்பன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய போட்டி இவரது மோசமான கேப்டன்சியினால் ட்ரா ஆனது.

இன்னும் சொல்லப்போனால் தோற்றே கூட இருப்போம். தென் ஆப்பிரிக்காவுக்கு 458 ரன்கள் வெற்றி இலக்கு. தென் ஆப்பிரிக்கா 108/0-லிருந்து 197/4 என்று தடுமாறியது. ஆனால் அதன் பிறகு டுபிளெசிஸ் (134), ஏ.பி.டிவில்லியர்ஸ் (103) சேர்ந்து 205 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் இந்த பார்ட்னர்ஷிப்பின் போதே 80 ஓவர்கள் முடிந்த பிறகு புதிய பந்தை எடுத்திருக்க வேண்டும். ஆனால் புதிய பந்தை எடுக்காமல் 56 ஓவர்களை பழைய பந்திலேயே வீசி, சணற்கண்டு வெளியே தெரியும் வரை பவுலர்களை வீச வைத்து படுத்தினார் தோனி. தென் ஆப்பிரிக்கா 450/7 வரை வந்துவிட்டனர். ஆட்டம் ட்ரா ஆனது.

புதிய பந்தை தோனி எடுக்காமல் ஏன் வீசினார் என்பதற்கு அவர் கொடுத்த விளக்கம் அதை விட அபத்தமானது. சரி விட்டுவிடுவோம். ஆகவே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தோனி ஒரு தாதா கேப்டன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு கேப்டன்சி வரவில்லை. குறிப்பாக தனக்குச் சாதகமாக இல்லாத பிட்ச்களில் அவரது கேப்டன்சி டாப் கேப்டன்களுக்கு அருகில் கூட எட்டாது என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மை.

இந்நிலையில் அடுத்த தோனி யார் என்ற விவாதங்கள் வெள்ளைப்பந்தைப் பொறுத்தவரை எழுந்துள்ளது. 2007 டி20 உலகக்கோப்பை தருணத்தில் தோனியிடம் கேப்டன்சியைக் கொடுத்து 2007 ஐசிசி 50 ஒவர் உலகக்கோப்பையில் வாங்கிய உதைக்கு மருந்து தேடும் விதமாக டி20 உலகக்கோப்பையை வென்று அந்தப் படுதோல்வியை மறக்கடிக்கச் செய்ததில் தோனியின் பங்கு அளப்பரியது.

அதே போல் இப்போது ஹர்திக் பாண்டியாவை முழு நேர டி20 கேப்டனாக்க வேண்டும், 2007 உலகக்கோப்பையின் பாதையில் செல்ல வேண்டும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஏன் இவர் பயிற்சியாளராக இருக்கும் போதே இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்ற கேள்வி இருந்தாலும் இப்போதைக்கு ரவி சாஸ்திரி கூறுவதன் சாராம்சம் என்னவெனில் தோனியைப் போல் ஒரு டி20 கேப்டனை உருவாக்க வேண்டும் என்ற ஆசையே.

அதே போல் இங்கிலாந்தின் முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் கிரேம் ஸ்வான், இன்னொரு வீரரை தோனியின் கேப்டன்சி போல் உள்ளதாக பாராட்டியுள்ளார். அது சஞ்சு சாம்சனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

கிரேம் ஸ்வான் கூறுவது இதுதான்: “ஐபிஎல் தொடரில் நான் கடந்த 5-6 சீசன்களாக சஞ்சு சாம்சனின் ஆட்டத்தையும் செயல்பாட்டையும் பார்த்து வருகின்றேன். ஒரு நல்ல தலைவராகவும் அணியின் வழிகாட்டியாகவும் சீராக பேட்டிங்கில் ஆடும் ஒரு மூத்த வீரராகவும் சஞ்சு சாம்சன் எழுந்துள்ளார். முன்பெல்லாம் 6-7 போட்டிகள் ஒன்றுமே ஆடாமல் திடீரென் ஒரு கிரேட் இன்னிங்ஸை ஆடுவார், ஆனால் இன்று ‘மிஸ்டர் நம்பகம்’ என்றால் அது சஞ்சுதான்.

அதுவும் அவரது அமைதியான குணம், உறுதியான முடிவுகள் ஆகியவை இளம் தோனியை எனக்கு நினைவூட்டுகின்றது. அவரைப்போலவே அமைதியை இழப்பதில்லை, கூலாக இருக்கின்றார். ஆட்டத்தின் போக்கை தோனியைப் போலவே மிக அருமையாக அறுதியிடுகின்றார் சஞ்சு சாம்சன்” என்று சஞ்சுவை அடுத்த தோனி என்கிறார் கிரேம் ஸ்வான்.

இந்த இருவரது கூற்றில் ரவி சாஸ்திரி சொல்வதுதான் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம், அதாவது ஹர்திக் பாண்டியா கேப்டனாகி விடுவார். ஆனால் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம்பெறவே திணறுவார். ஏனெனில் ஏற்கெனவே அவரை அப்படித்தானே நிர்வாகம் நடத்தி வருகின்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x