Published : 12 May 2023 04:39 PM
Last Updated : 12 May 2023 04:39 PM

ஊரெங்கும் இதே பேச்சு: யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பெரிய ஸ்டார்?

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பல்வேறு சாதனைகளை முறியடித்து அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்து விட்டார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் 575 ரன்களை ஒரு சதம் 4 அரைசதங்களுடன் 167.15 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார் யஷஸ்வி. இதனையடுத்து இவரை இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.

நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணையித்த இலக்கு என்னவோ 150 ரன்கள்தான். இலக்கை விரட்டும் போது ஜெய்ஸ்வால், இன்னொரு ஜெயசூரியாவாகி விட்டார். 47 பந்துகளில் 98 ரன்களை விளாசியதோடு, சதம் எடுப்பதற்காகப் பரபரப்படையாமல் வெற்றி மீது குறிவைத்தார். 41 பந்துகள் மீதம் வைத்து ராஜஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று விட்டது. பானிபூரி கடையில் வேலை செய்து முன்னுக்கு வந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியின் அடுத்த ஸ்டார் என்று அவரது இன்னிங்ஸைப் பார்த்த ஆகாஷ் சோப்ரா தன் யூடியூப் வீடியோ சேனலில் கூறியுள்ளார்.

“அவருக்கான கரகோஷங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இப்போதைக்கு ஊதா நிற ஜெர்சியை அணிந்து ஆடிவருகின்றார், விரைவில் இந்திய சீருடையை அணிவார். 100% இந்திய அணிக்கு இவர் ஆடுவது உறுதி, விளையாடுவாரா என்ற கேள்வி அல்ல, எப்போது ஆடப்போகிறார் என்பதே கேள்வி” என்கிறார் ஆகாஷ் சோப்ரா.

“யாஷஸ்வி ஒரு சூப்பர் பிளேயர். கொல்கத்தா அணியை தான் மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். செஹல் 4 விக்கெட்டுகளை எடுத்ததும் முக்கியம்தான் இல்லை என்று கூறவில்லை. ஆனால் இந்த இன்னிங்ஸில் ரவுண்ட் வடிவத்தில் இருந்த பந்து யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அடியினால் வடிவம் இழந்தது, வடிவம் சிதைந்தது.

அதுவரை பிட்ச் வேறு ஒன்றாகத் தெரிந்தது, யாஷஸ்வி பேட்டிங் செய்த போது பிட்ச் முற்றிலும் வேறு ஒன்றாகத் தெரிந்தது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால்தான் அதிக மதிப்பு மிக்க வீரர் என்று நான் தேர்வு செய்வேன். செஹல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், ஐபில் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் சாதனை நிகழ்த்தியுள்ளார், இருந்தாலும் அவர் பெயரை நான் எடுத்து விட விரும்புகிறேன். உண்மை என்னவெனில் யாஷஸ்வி இன்னிங்ஸ் ஸ்பெஷல்.

இந்த இன்னிங்ஸ் நினைவு வைத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பதோடு அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்று நான் கருதுகிறேன். அவர் இன்னிங்ஸை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. டி20 வரலாற்றில் அதிவேக அரைசத சாதனை வேறு நிகழ்த்தியுள்ளார் ஜெய்ஸ்வால். அதுவும் இந்த சிறிய வயதில் இத்தகு சாதனை நிகழ்த்துவது சாதாரணமல்ல, ஆகவே என்னைப் பொறுத்தவரை அதி மதிப்பு வீரர் என்றால் அது யாஷஸ்வி ஜெய்ஸ்வால்தான். இந்திய அணியில் விரைவில் நுழைவார், அடுத்த ஆப்கானிஸ்தான் தொடருக்கே கூட ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இடம்பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்கிறார் ஆகாஷ் சோப்ரா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x