Published : 22 Apr 2023 08:59 PM
Last Updated : 22 Apr 2023 08:59 PM

IPL 2023 | விரயமான ராகுலின் அரைசதம்: கடைசி ஓவரில் குஜராத் 'த்ரில்' வெற்றி!

லக்னோ வீரரை ரன் அவுட் செய்யும் மோகித் சர்மா

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனில் 30-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. 135 ரன்கள் மட்டுமே எடுத்த குஜராத் அணி, லக்னோவை 128 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குஜராத்.

லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, சாஹாவுடன் இணைந்து 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். சாஹா, 37 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த அபினவ், விஜய் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

ஹர்திக் பாண்டியா, 50 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது குஜராத். ஆடுகளம் ரன் குவிப்புக்கு அறவே கைகொடுக்காத வகையில் மிகவும் மந்தமாக இருந்தது. லக்னோ அணிக்காக க்ருணல் பாண்டியா அபாரமாக பந்து வீசி இருந்தார். 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

136 ரன்களை விரட்டிய லக்னோ அணிக்கு கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மேயர்ஸ், 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த க்ருணல் பாண்டியாவுடன் 51 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ராகுல். க்ருணல் பாண்டியா, 23 ரன்களில் வெளியேறினார்.

கடைசி 5 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே லக்னோ அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. 8 விக்கெட்டுகள் அந்த அணியின் கைவசம் இருந்தன. அங்கிருந்து இலக்கை எட்டுவது மிகவும் சுலபம். ஆனால், லக்னோ வெறும் 22 ரன்களை மட்டுமே எடுத்தது.

பூரன், கே.எல்.ராகுல், ஸ்டாய்னிஸ், ஆயூஷ் பதோனி, தீபக் ஹூடா ஆகியோர் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இதில் மோகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரின் 2-வது மற்றும் 3-வது ஓவரில் ராகுல் மற்றும் ஸ்டாய்னிஸை அவுட் செய்தார் மோகித். தொடர்ந்து பதோனி மற்றும் ஹூடா அடுத்தடுத்த பந்துகளில் ரன் அவுட்டாகி வெளியேறினர். 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தது லக்னோ. இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை மோகித் சர்மா வென்றார். ராகுல், 61 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்தார். 12.3-வது பந்துக்கு பிறகு லக்னோ அணி பவுண்டரி விளாசவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x