Published : 11 Apr 2023 01:48 PM
Last Updated : 11 Apr 2023 01:48 PM

IPL | சென்னை போட்டிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் ரசிகர்கள் - ஸ்பான்சர்கள்தான் காரணமா?

கோப்புப்படம்

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளைப் பெறுவது பெரும் சவாலாக மாறி இருப்பதாக ரசிகர்கள் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சில போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த சூழலில் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் ரசிகர்களுக்கு கிடைக்காமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சமூக வலைதள பதிவுகளையும் பார்க்க முடிகிறது. இதே சூழல்தான் சென்னை - லக்னோ இடையிலான போட்டிக்கும் இருந்தது.

கார்ப்பரேட் ஸ்பான்சர்கள் வசம் மேட்ச் டிக்கெட்டுகள் செல்வது இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. ஏனெனில், சி/டி/இ லோயர் ஸ்டேண்ட்களுக்கான டிக்கெட் (ரூ.1,500) கவுண்டர் மூலமாகவும், டி/இ அப்பர் ஸ்டேண்ட் டிக்கெட் (ரூ.3,000) ஆன்லைன் மூலமாகவும், ஐ/ஜே/கே லோயர் ஸ்டேண்ட் டிக்கெட் (ரூ.2,500) மற்றும் அப்பர் ஸ்டேண்ட் டிக்கெட் (ரூ.2,000) ஆன்லைன் மற்றும் கவுண்டர் வழியே விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு போட்டியாகதான் டிக்கெட் விற்பனையை மேற்கொண்டு வருகிறது சிஎஸ்கே நிர்வாகம். இதுதவிர எஞ்சியுள்ள ஸ்டேண்ட்களின் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதில்லை.

இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் கார்ப்பரேட், ஸ்பான்சர்கள், பிரபலங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நிகழ்வை ஒருங்கிணைப்பவர்கள் வசம் செல்வதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மொத்தத்தில் மைதானத்தின் இருக்கைகளில் 40 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே ரசிகர்கள் வசம் செல்வதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் கள்ளச்சந்தையில் 4,000 முதல் 5,500 ரூபாய் வரை மேட்ச் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல். இதில் வேடிக்கை என்னவென்றால் சமூக வலைதளங்கள் மூலமாகவே பிளாக் டிக்கெட் விற்பனை ஜரூராக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. கவுன்டர் வழியில் டிக்கெட் வாங்க விரும்புபவர்கள் இரவு முழுவதும் காத்திருந்தாலும் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுவதாக தெரிகிறது. இது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். டிக்கெட் கிடைக்காத விரக்தியால் பல கருத்துகளை ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

மறுபக்கம் காம்ப்ளிமெண்ட்ரியாக கொடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கான ஸ்டேண்ட்கள் சேப்பாக்கத்தில் காத்து வாங்குகின்றன. லக்னோவுக்கு எதிரான போட்டியில் இதை நேரடியாக பார்க்க முடிந்தது. இதுகுறித்து போட்டியை தமிழில் வர்ணனை செய்யும் வர்ணனையாளர்களும் பேசி இருந்தனர்.

தற்போது சென்னை - சேப்பாக்கம் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் மொத்தமாக 15,000 டிக்கெட்டுகள் என்ற எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் ஒரு பகுதியை ஸ்பான்சர்கள் உடன் சிஎஸ்கே நிர்வாகம் பகிர்ந்து கொண்டு வருவதாகவும் தகவல். அதே போல எஞ்சியிருக்கும் டிக்கெட்டுகள் பிசிசிஐ, டிஎன்சிஏ மற்றும் டிவிஷனல் அளவில் இயங்கும் கிளப்கள் வசம் செல்வதாக தகவல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x