Published : 29 Mar 2023 04:24 PM
Last Updated : 29 Mar 2023 04:24 PM

இம்பேக்ட் பிளேயர் முதல் ரிவ்யூ வரை: ஐபிஎல் 2023-ல் சுவாரஸ்யமான புதிய விதிமுறைகள்

கடந்த ஐபிஎல் தொடருக்கும் இப்போது நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சில பல புதிய விதிமுறைகள் தொடரை மேலும் சுவாரஸ்யமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக டாஸ் போட்ட பிறகு அணிகள் தங்கள் ஆடும் லெவனை இறுதி செய்யலாம். அதாவது ‘இம்பேக்ட் பிளேயர்’ என்ற ஒன்று அறிமுகம் ஆகின்றது. அதாவது ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரரை அணிகள் களமிறக்கலாம். நடுவர் தீர்ப்பு ரிவியூ முறை வெறும் அவுட்களுக்கு மட்டுமல்ல, மாறாக நோ-பால், வைடுகளுக்கும் ரெஃபரல் உண்டு.

முதலில் பவுலிங் செய்யும் அணியின் கேப்டன் தனது லெவனில் பவுலர்களை அதிகம் சேர்த்துக் கொண்டு பிறகு அதில் ஒருவரை நீக்கி விட்டு பேட்டிங்கின் போது இம்பேக்ட் பிளேயர், அதாவது பேட்டரை தேர்வு செய்து கொள்ளலாம். அயல்நாட்டு வீரரை இம்பேக்ட் வீரராக இறக்க வேண்டுமென்றால், அணியில் ஏற்கெனவே இருக்கும் உச்சவரம்பான 4 அயல்நாட்டு வீரர்கள் இருக்கக் கூடாது. அப்போதுதான் இம்பாக்ட் வீரராக அயல்நாட்டு வீரரை இறக்க முடியும்.

இதற்கு உதாரணம் கூற வேண்டுமெனில் ஆர்சிபி அணி முதலில் பவுலிங் செய்யும் போது, கோலியையோ, இன்னொரு முக்கிய பேட்டரையோ உட்கார வைத்து விட்டு, மீண்டும் பேட் செய்யும் போது உட்கார வைத்தவரை இறக்கலாம். அதேபோல் பிட்சிற்குத் தகுந்தாற் போல் இம்பாக்ட் பவுலரை களமிறக்கிக் கொள்ளலாம். ஆனால் யாருக்கு பதிலாக இவர் இறங்குகிறாரோ அந்த வீரர் அந்தப் போட்டியில் ஆட முடியாது.

இப்போது சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கம் பிட்சை ஸ்பின் பிட்சாக அல்லது குழிப்பிட்சாகப் போட்டு சாதகத்தை தன் பக்கம் வைத்திருந்தால், எதிரணியினரும் லெவனில் இல்லாத ஒரு ஸ்பின்னரை வேண்டுமானால் இம்பாக்ட் வீரராக களமிறக்கலாம். இதில் இன்னொரு சாதகம் என்னவெனில் ஒரு அணியில் ஒரு பவுலர் பவர் ப்ளே ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார் என்றால், அவர் 4 ஓவர்களை வீசச் செய்துவிட்டு, பிறகு அவரை அனுப்பி விட்டு இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டை அவருக்குப் பதிலாக இறக்கிக் கொள்ளலாம்.

கேப்டன்கள் டாஸிற்குப் பிறகு தங்கள் லெவனை இறுதி செய்யலாம். இம்பாக்ட் வீரர்களாக லெவனுடன் 4 வீரர்களை முதலில் அறிவிக்க வேண்டும். இம்பாக்ட் வீரரை இறக்க வேண்டி முடிவு எடுத்தால் 14 ஓவருக்குள் இறக்க வேண்டும். இந்த இம்பாக்ட் வீரர் யாருக்குப் பதிலாக வருகிறாரோ அந்த வீரர் வெளியேறி விட வேண்டியதுதான். அவரை மீண்டும் களமிறக்க முடியாது.

நடுவர் சிக்னல்: இம்பாக்ட் வீரரை களமிறக்குவது குறித்து கேப்டன், பயிற்சியாளர், 4வது நடுவர் களநடுவருக்கு தெரிவிப்பார். களநடுவர் இருக்கைகளையும் தலைக்கு மேல் தூக்கி குறுக்காகக் கைகளை வைத்து சிக்னல் செய்வார். அப்படிச் செய்தால் இம்பாக்ட் வீரர் இறங்குகிறார் என்று பொருள். இம்பாக்ட் வீரர் முறையால் டாஸ் வெல்லும் அணிகள் வெல்லும் என்பது போன்ற முன் தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள் முடிவுக்கு வரும். டாஸ் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதை முடித்து வைக்க இந்த இம்பாக்ட் வீரர் முறை உதவும் என்று நம்பப்படுகின்றது.

ஃபீல்டிங் செய்யும் அணிகள் குறித்த நேரத்திற்குள் ஓவரை வீசவில்லை என்றால், ஒரு பீல்டரை 30 அடி வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும். எத்தனை ஓவர்கள் பின் தங்கியிருக்கிறதோ அத்தனை ஓவர்களுக்கும் ஒரு பீல்டரை டீப்பில் இல்லாமல்தான் வீச வேண்டும். விக்கெட் கீப்பர்கள், பீல்டர்கள் மோசமான சைகைகள் காட்டினால் எதிரணியினருக்கு கூடுதலாக 5 ரன்கள் தரப்படும். மழையால் பாதிக்கப்படும் போட்டிகள் 10 ஓவராகக் குறைக்கப்பட்டாலும் இம்பாக்ட் வீரரை இறக்கலாம். இம்பாக்ட் வீரர் காயமடைந்தால் மாற்று வீரர் களமிறங்கலாம்.

அதேபோல் வைடு, நோ-பால் முடிவுகளையும் ரிவியூ செய்யலாம். இதுவும் தோனி போன்றோர் களத்தில் இறங்கி நடுவரை வசைபாடும் செயல்களைத் தடுக்கும். குரூப் ஏ-யில் இருக்கும் அணிகள் குரூப் பி-யில் இருக்கும் 5 அணிகளுக்கு எதிராக இருமுறை ஆடும். தங்கள் குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் ஒருமுறை மோதும். இதனால் ஒரு அணிக்கு 14 லீக் போட்டிகள் கிடைக்கும்.

மொத்தம் 58 நாட்கள் நடைபெறும் ஐபிஎல் 2023 தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும். இந்த மாற்றங்களினால் நிச்சயம் போட்டியின் காலநேரம் அதிகரிக்கவே செய்யும். இதில் ஸ்லோ ஓவர் ரேட்டுக்கு அபராதம் வேறு விதித்தால் என்னதான் செய்வார்கள்? நடுவர்களுக்கும் வேலை அதிகம், அணியின் கேப்டன்கள், நிர்வாகக் குழுவினர், பயிற்சியாளர்களுக்கும் திட்டமிடுவதில் கடினமான பணியே காத்திருக்கின்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x