Published : 13 Sep 2017 02:39 PM
Last Updated : 13 Sep 2017 02:39 PM

கோலி நண்பர், தோனி உத்வேகமூட்டும் அறிவுரையாளர்: யஜுவேந்திர சாஹல் நெகிழ்ச்சி

இந்திய அணியின் ரிஸ்ட் லெக் ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹல், தனக்கு இரண்டு வழிகாட்டும் ஒளிவிளக்குகள் கோலி மற்றும் தோனி என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சாஹல் கூறியிருப்பதாவது:

வழிகாட்டும் விளக்குகள் இருப்பது அவசியம், ஆனால் எனக்கு 2 பேர் அந்த வகையில் வாய்த்துள்ளது அதிர்ஷ்டமே. கோலி மற்றும் தோனி ஆகியோர் எனக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகள். என் வெற்றியின் பின்னால் இவர்களின் பங்களிப்பு அதிகம். கோலி ஒரு நண்பர் போல் என்னை நம்பி நான் என்ன திட்டம் வைத்துள்ளேனோ அதனைச் செயல்படுத்த ஊக்கமளிப்பவர்.

மாஹி பாய் (தோனி) ஒரு உத்வேகமூட்டும் அறிவுரையாளர், எப்போது எனக்கு சந்தேகம் ஏற்பட்டாலும் தோனியின் ஆலோசனையை நாடுவேன். விக்கெட் கீப்பராக என்ன நடக்கிறது என்று அவருக்கு தெளிவாகத் தெரியும். ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மெனுக்கு எதிரான சரியான பந்து வீச்சு உத்தி என்னவென்பது அவருக்குத் தெரியும்.

நான் இப்போது ஆட்டத்தின் எந்த நிலையிலும் வீச முடியும், எனக்கு இந்தத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியதற்கு கேப்டன் விராட் கோலிதான் காரணம். டி20 போட்டியின் முதல் ஓவராக இருந்தாலும் 50 ஓவர் கிரிக்கெட்டின் கடைசி ஓவராக இருந்தாலும் நான் வீசத் தயாராக இருக்கிறேன்.

என்னுடைய திறமையில் எனக்கு நம்பிக்கை இருந்தாலும் கோலியும் தோனியும் எங்களைப் போன்ற இளைஞர்களின் வேலையை எளிதாக்குகின்றனர்.

இவ்வாறு கூறினார் சாஹல்.

2019 உலகக்கோப்பையில் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் சிக்கலான, கடினமான ரிஸ்ட் ஸ்பின் பந்துவீச்சு பெரிய பலனளிக்கும் என்று பரவலான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x