Published : 07 Mar 2023 06:59 AM
Last Updated : 07 Mar 2023 06:59 AM

4-வது டெஸ்டிலும் ஆஸி. அணியை வழிநடத்துகிறார் ஸ்டீவ் ஸ்மித்

அகமதாபாத்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூர், டெல்லியில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி வென்ற நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், உடல் நிலை சரியில்லாத தனது தாயை காண்பதற்காக அவசரமாக சிட்னி திரும்பினார்.

3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பாட் கம்மின்ஸ், இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், தனது தாயுடன் இருக்க விரும்பியதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதற்கு அனுமதி வழங்கியது. இதனால் இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களமிறங்கியது.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியும் கண்டது. இந்த வெற்றியால் வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் ஆஸ்திரேலியா தகுதி பெறுவதை உறுதி செய்தது.

இந்தூர் போட்டியின் முடிவில் 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியிலும் பாட் கம்மின்ஸ் பங்கேற்பது சந்தேகம் என ஏற்கெனவே தகவல்கள் வெளியானது.

ஒருநாள் தொடரிலும் சந்தேகம்..: இந்நிலையில் பாட் கம்மின்ஸ், சிட்னியில் தனது தாயுடனே தங்கியிருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இதனால் அகமதாபாத் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலேயே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் தொடரை அடுத்து இரு அணிகளும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இந்தத் தொடரிலும் பாட் கம்மின்ஸ் கலந்துகொள்வது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x