Published : 28 Feb 2023 04:21 PM
Last Updated : 28 Feb 2023 04:21 PM

IND vs AUS | இந்திய ஆடுகளங்கள் பற்றி நான் நன்கு அறிவேன்: ஆஸி. கேப்டன் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித் | கோப்புப்படம்

இந்தூரில் புதன்கிழமை இந்தியா மாற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழிநடத்தவிருப்பவர் ஸ்டீவ் ஸ்மித். இவர் கடந்த போட்டியில் படுமோசமான ஒரு ஸ்வீப் ஷாட்டை ஆடப்போய் பெரிய சரிவுக்கு வித்திட்டது குறித்து ‘மூளை மழுங்கிப்போன நிலையில் ஆடிவிட்டேன்’ என சுய விமர்சனம் செய்து கொண்டுள்ளார்.

டெல்லியில் ஸ்வீப் ஷாட்களில் ஆட்டமிழந்த 6 வீரர்களில் ஸ்மித்தும் ஒருவர். அதுவும் இவர் ஆட்டமிழந்த பிறகு 28 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்து தோல்வி கண்டது. பொதுவாக நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் குழிப்பிட்ச்கள், டாக்டரிங் என்று சொல்லப்படும் வேண்டுமென்றே திருத்தப்படும் பிட்ச்களுக்கும் வித்தியாசம் இருக்கின்றது என்று. மேலும் பிட்சை விமர்சனம் செய்தால் இருவருக்கும் ஒரே பிட்ச்தானே என்று கூறுபவர்கள் ஏன் அங்கு போடப்படும் கிரீன் டாப் பிட்சும் இருவருக்கும்தானே என்பதை மறந்து விட்டு பேசுகின்றனர்.

ஆனால் இங்கும் ஒன்றை நினைவுப்படுத்துவது நல்லது. கிரிக்கெட் புரிந்தவர்களுக்கு, அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும் கிரீன் டாப் பிட்ச் என்பதில் ஸ்விங் இருக்கும் பவுன்ஸ் எளிதாகக் கணிக்கப்பட கூடியதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிட்ச் ஆகும் பந்து இந்த உயரத்தில் வரும் என்பதை எளிதில் கணிக்கலாம். ஆனால், இங்கு போடப்படும் டாக்டர்டு பிட்ச்களில் ஒரே இடத்தில் பிட்ச் ஆகும் ஒரு பந்து ஸ்பின்னர்களுக்கு திரும்பி எழும்பும் அதே இடத்தில் பிட்ச் ஆகும் மற்றொரு பந்து எழும்பாமல் கணுக்காலுக்குக் கீழ் உருண்டு நேராகச் செல்லும். இத்தகைய பிட்ச்களில் ஆடி ஆடி பழக்கப்பட்டவர்கள் இந்தியர்கள் என்பதால் இது இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் என்பதுதான் உண்மை. எனவே இருவருக்கும் சமமான பிட்ச் அல்ல. இருவருக்கும் என்பது அணிகளுக்கு சாதகமாக போடுவது அல்ல. பேட்டுக்கும் பந்துக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கும் சமச்சீரான பிட்சைத்தான் நல்ல பிட்ச் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.

வயல்வெளி போன்றோ, பிட்சில் நடுவில் மட்டும் தண்ணீர் காட்டி விட்டு இரு முனைகளிலும் பந்துகள் பெரும்பாலும் பிட்ச் ஆகும் எந்த இடத்திலும் தண்ணீர் பாய்ச்சாமல் ‘வறள வறள’ விட்டு காயவிட்டால் அங்கு மண் பொல பொலவென்று தளர்வாக ஆகி 2-வது ஓவரிலேயே மண் கண்களுக்கு தெரியும் அளவுக்கு பெயர்ந்து வருகின்றன. இது ஸ்பின் பிட்சா? ஒரு பிட்ச் ஸ்பின் பிட்ச் என்றால் அது குறைந்தது 3ம் நாள் காலைதான் ஸ்பின் எடுக்கும் பிட்ச் ஆகும். 2 நாட்கள் பந்து வீச்சாளர்கள் காலடிப் பட்டுப் பட்டு அந்த இடங்களில் மண் தளர்வாகும்போது அதை ஸ்பின்னர்கள் பயன்படுத்துவார்கள் என்பதே. முதல் பந்து போடும்போதே மண் பெயர்ந்து வருவது என்பது ஸ்பின் பிட்ச் அல்ல என்பதுதான் கிரிக்கெட் அறிந்தவர்கள் தெரிவிக்கும் கருத்தாகும்.

இந்நிலையில், இந்தூர் பிட்சும் மெதுவாக, திரும்பும் இன்னொரு பள்ளப்பிட்ச் அல்லது வயல்வெளி போன்ற பிட்ச் ஆகவே இருக்க வாய்ப்புள்ளது. இது குறித்து அணுகுமுறையை மாற்றுவது பற்றி ஆஸ்திரேலிய கேப்டனாக செயல்பட விருக்கும் ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது, “நாங்கள் அவசரப்பட்டு ஆடுகின்றோம். இது குறித்து பேசி வருகின்றோம். அணுகுமுறையை கொஞ்சம் மாற்ற வேண்டும் என்பது பற்றியும் எப்படி என்பது பற்றியும் ஆலோசித்து வருகின்றோம்.

பெரிய உணர்ச்சி வேகத்துடன் ஆட வேண்டியதில்லை. அந்த வேகத்தில் ரிஸ்க் அதிகம் உள்ளது. ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொண்டேயிருக்க வேண்டும் சந்தர்ப்பம் பார்த்து வேகமாக ஆட வேண்டும். ஆனால், நாங்கள் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோம். இருந்தாலும் எதுவும் சுலபமல்ல, இந்திய அணியினர் நம் மீது ஆதிக்கம் செலுத்தும் போது அவர்கள் விருப்பப்படி ஆட நம்மைப் பணிப்பார்கள். நம்மைப் பொறுத்தவரை ஆட்டத்தை துரிதகதியில் ஆடாமல் கொஞ்சம் மெதுவாக ஆட வேண்டும். அதுவும் நெருக்கடியில் இருக்கும் போது மொத்தமாகவே ஆட்டத்தை மெதுவாக்க வேண்டும். மெதுவாக்குவதன் மூலம் பவுலர்களை காத்திருக்கச் செய்ய வேண்டும். அல்லது வித்தியாசமாக ஏதாவது செய்ய வைக்க வேண்டும்.

இந்தியாவில் அல்ல உலகெங்குமே இன்னிங்ஸை தொடங்குவதுதான் கடினம். ஆனால் இந்தியாவில் ஒருமுறை நம் கண்கள் பந்தின் நடத்தைக்குப் பழகி விட்டால் அதை பயன்படுத்த வேண்டும். அப்போது அவுட் ஆகக்கூடாது. எப்போதாவது நல்ல பந்து வரும் அதில் நாம் அவுட் ஆகலாம். ஆனால் ‘பவுலர் நம்மை வீழ்த்தும் பந்தில் நம் பெயரைக் குறிப்பிட்டு வீசுகின்றனர்’ என்று கூறுவதை என்னால் ஏற்க முடியாது. இத்தகைய சிந்தனையை நம் மனதிலிருந்து அகற்ற வேண்டும்.

நான், லபுஷேன், நன்றாக ஆடிவரும் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோரிடையே நல்ல கூட்டணி உருவாகி விட்டால் போதும். முதல் இன்னிங்ஸை சரியாக ஆடிவிட்டால் நிச்சயம் அது பலனளிக்கும்.

இந்தியாவின் பிட்ச் உள்ளிட்ட நிலைமைகள் எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு இந்தியா இரண்டாவது தாயகமாகும். இங்கு நிறைய ஆடியுள்ளேன். இதன் புதிர்களை அறிவேன். பிட்ச்கள் எப்படி நடந்து கொள்ளும் என்று தெரியும். 3-வது டெஸ்ட் போட்டியை எதிர்நோக்குகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x