Published : 21 Jan 2023 04:59 PM
Last Updated : 21 Jan 2023 04:59 PM

சமி அபார பந்துவீச்சு; நீடிக்காத பேட்ஸ்மேன்கள் - 108 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 108 ரன்களிலேயே சுருண்டது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூரில் உள்ள ஷகீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஃபின் ஆலன் - தேவன் கான்வே இணை நியூசிலாந்துக்கு தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரை வீசிய முகமது ஷமி, ஃபின் ஆலெனை வீழ்த்தினார். ஒரு ரன்கூட எடுக்காமல் இருந்த நிலையில், நியூசிலாந்து தனது முதல் விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்தது. அடுத்து வந்த ஹென்றி நிக்கோல்ஸ் 2 ரன்களிலும், தேவன் கான்வே 7 ரன்களிலும் வெளியேறிதால் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து திணறியது. 18 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 19வது ஓவரின் மூன்றாவது பந்தில் மைக்கேல் பிரேஸ்வெல்லும் முகமது ஷமியின் பந்துவீச்சில் அவுட்டானார். க்ளென் பிலிப்ஸ், (36), மைக்கல் ப்ரேஸ்வெல்(22), மிட்செல் சாட்னர் (27) ஆகிய மூவரைத்தவிர மற்றவ அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியதால் 34.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களை மட்டுமே நியூசிலாந்து அணி சேர்த்தது.

இந்திய அணி தரப்பில் முஹம்மத் சமி 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும், முஹம்மத் சிராஜ், சர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் மூவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். தற்போது 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x